4 ஆண்டுகள் பிரிவுக்கு பின்னர்.. பாஜக கூட்டணியில் மீண்டும் இணைகிறது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்
4 ஆண்டுகள் பிரிவுக்கு பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணையவுள்ளது.
பாட்னா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கம் வகித்திருந்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தற்போது மீண்டும் இணையவுள்ளது.
கடந்த 2015-இல் பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி நிதிஷ் குமாரின் ஜேடியு, லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மகா கூட்டணி அமைத்தன. மேலும் தேர்தலிலும் வெற்றி பெற்றன.
மாட்டு தீவண ஊழல் வழக்கில் துணை முதல்வராக உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் கோரின.

சிபிஐ சோதனை
மேலும் லாலு, தேஜஸ்வி ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று தேஜஸ்வியிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

கடும் நெருக்கடி
ஊழலை ஒழிப்போம் என்று பிரசாரம் செய்த நிதிஷ்குமாரின் ஆட்சியில் ஊழல் கரை படிந்த தேஜஸ்வி துணை முதல்வராக இருப்பது எதிர்க்கட்சியினரிடையே கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் நிதிஷுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

பதவி விலகினார், அரியணை ஏறினார்
தேஜஸ்வி பதவி விலகாததால் , கடந்த ஜூலை 26-ஆம் தேதி நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் அரியணை ஏறினார். தேஜஸ்வியின் துணை முதல்வர் பதவி பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடிக்கு வழங்கப்பட்டது.

துணை ஜனாதிபதி தேர்தல்
துணை ஜனாதிபதி தேர்தல், பாஜக கூட்டணியில் இணைவது உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கு எதிராக இருந்த ஜேடியு தலைவர் ஷரத் யாதவ், கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறிய நிதிஷ்குமார் அவரை ஐக்கிய ஜனதா தளம் எம்பிக்களுக்கான மாநிலங்களவை தலைவர் பதவியிலிருந்து கடந்த வாரம் நீக்கினார்.

பாஜகவுடன் இணைகிறது
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில், தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணையவுள்ளது. பாட்னாவில் நடைபெற்ற கட்சியின் மூத்த அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணையவுள்ளது குறித்து நிதிஷ்குமார் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications