நிதீஷ் அலையில் சிக்கி சிதைந்து போன பரிதாபம்... ரொம்பக் கேவலமாக தோற்ற பாஜக!
பாட்னா: பீகாரில் கடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை மிகக் கேவலமாக தோற்கிறது பாஜக. கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளில் கிட்டத்த பாதியை தற்போது இழந்து நிற்கிறது பாஜக.
கடந்த 2010ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி்யாக தேர்தலைச் சந்தித்தது பாஜக. ஆனால் இந்த முறை அது ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வந்து கட்சி ஆரம்பித்த முன்னாள் முதல்வர் மஞ்சி மற்றும் ராம் விஸால் பாஸ்வானின் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது.
ஆனால் எதிர்பார்த்த முடிவை அது பெற முடியவில்லை. மாறாக, இருந்த இடங்களையும் இழந்து உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

2010 தேர்தலில்
2010ல் பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் கை கோர்த்து ஓரணியாக நின்று போட்டியிட்டன. மறுபக்கம் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், பாஸ்வானின் லோக் ஜன சக்தியும் கூட்டணி அமைத்தன. காங்கிரஸ் தனியாக நின்றது. கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிட்டனர்.

மாறிய கூட்டணி
இந்தத் தேர்தலில் கூட்டணிகள் மாறின. பாஸ்வான் கட்சி மற்றும் நிதிஷுக்கு எதிராக மாறிய மஞ்சி ஆகியோரைக் கூட்டணி சேர்த்து போட்டியிட்டது பாஜக. மறுபக்கம், லாலு, காங்கிரஸுடன் கை கோர்த்து வலுவான கூட்டணியை அமைத்தது.

ஓசியில் மஞ்சள் குளித்த பாஜக
கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 201 இடங்கள் கிடைத்தன. இதில் நிதீஷ் கட்சிக்கு 115 இடங்களும், பாஜகவுக்கு 91 இடங்களும் கிடைத்தன. மோடி அலையே இந்த. கூட்டணி வெற்றிக்கு என்று பாஜக தரப்பில் கூறிக் கொண்டனர். கூட்டணி ஆட்சி அமைந்த வேகத்தில் கூட்டணி தகர்ந்தது.

பெரும் தோல்வி
இந்தத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 91 இடங்களைப் பெற்ற அக்கட்சி இப்போது அதில் பாதியைத்தான் பெறுகிறது. 50 சதவீத இடங்களை அது இழந்துள்ளது. கூட்டணியாகவே இதுவரை 70 இடங்களில்தான் அது முன்னணியில் உள்ளது. இதில் பாஜக மட்டும் வெறும் 55 தொகுதி்களில்தான் முன்னணியில் உள்ளது.

மோசமான தோல்வி
நிதீஷ் குமார் தயவால்தான் கடந்த தேர்தலில் அது பெரும் இடங்களைப் பெற்றது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது. மேலும் நிதீஷ் குமார்தான் பீகாரின் உண்மையான மக்கள் தலைவராக இருக்கிறார் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

லாலு, காங்கிரஸுக்கும் நிதீஷ் தயவால் வெற்றி
கடந்த தேர்தலில் பாஜகவுக்கு வாழ்வளித்த நிதீஷ் குமார் இந்த முறை லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸுக்கும் கை கொடுத்து தூக்கி விட்டுள்ளார். பீகாரின் அசைக்க முடியாத மக்கள் தலைவராக நிதீஷ் மாறியுள்ளார் என்பதையும் இந்தத் தேர்தல் நமக்குக் காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications