இலவச மதிய உணவு வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும்.. மத்திய அரசு உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி
பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட ஆதார் எண்ணை பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மதிய உணவை தயார் செய்யும் சமையல்காரர் மற்றும் அவரது உதவியாளரும் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
ஜம்மு காஷ்மீர், அசாம், மேகலாயா மாநிலங்களுக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவினால், மதிய உணவு திட்டம் இன்னும் வெளிப்படை தன்மை மிக்கதாகவும், சிறப்பானதாகவும் மாறும். அனைத்து மாநிலங்களுக்கும் இது பற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்து பராமரிப்பு
மனித வள மேம்பாட்டு அமைச்சக தகவல்படி, 2008ம் ஆண்டு முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 700 கலோரி சத்து கிடைக்க வேண்டும், புரோட்டின் 20 கிராம் அளவுக்காவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

நடைமுறை சாத்தியம்
ஆனால், ஜூன் மாதத்திற்குள் மாணவர்கள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருப்பது நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காத பல கோடி பள்ளி மாணவர்கள் நாட்டில் உள்ளனர்.

ஆதார் மையங்களுக்கு அலையமுடியாது
அனைத்து பள்ளி மாணவர்களையும் ஜூன் மாதத்திற்குள் ஆதார் மையங்களுக்கு அழைத்துச் சென்று ஆதார் எண் பெறுவது என்பது நடைமுறை சிக்கல்மிகுந்த பணி.

கொடுமை
மாணவர்களை ஆதார் மையங்களுக்கு இந்த கோடை காலத்தில் அலையவிடாமல், பள்ளிகளிலேயே ஆதார் முகாம்களை அரசு நடத்தினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அல்லது மக்களை கொடுமைப்படுத்தும் மற்றொரு மத்திய அரசின் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படும்.












Click it and Unblock the Notifications