காவிரி தீர்ப்பில் தமிழகத்திற்கு ஒரே ஒரு நல்லது.. மத்திய அரசு நினைத்தால்தான் அதுவும் நடக்கும்
Recommended Video
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீட்டை மேற்கொள்ள மேலாண்மை வாரியம் அமைக்கும் பொறுப்பு மத்திய அரசினுடையது என்று, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளதோடு, 6 வாரங்களுக்குள் அதை செய்ய உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கான நீரில் அளவு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு 177.2 டிஎம்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு இதே அளவு தண்ணீர் அதிகம் கிடைக்கப்போகிறது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமானால், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசு தலையிட்டது
ஆனால், இதற்கு முதலில் தலையாட்டிய மத்திய அரசு தரப்பு, பின்னர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலாண்மை வாரியம் அமைப்பது நாடாளுமன்றத்தின் வேலை என்றும், இதில், சுப்ரீம் கோர்ட் தலையிட கூடாது என்றும் வாதம் முன் வைத்தது.
மேலாண்மை வாரியம் இல்லை
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசுடையது என்றும், தங்கள் பணி இல்லை என்றும் கூறியுள்ளது.6 வாரங்களுக்குள் மத்திய அரசு அதை செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
தண்ணீரை திறக்காது
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், இந்த தண்ணீரையும் கர்நாடகா உரிய வகையில் திறந்துவிடப்போவது இல்லை. இதுவே கடந்த காலம் சொல்லும் பாடம். எனவே காவிரி மேலாண்மை வாரியத்திடம் அணை கட்டுப்பாடு சென்றால் மட்டுமே இப்போது வழங்கிய உத்தரவுப்படியான தண்ணீராவது தமிழகத்திற்கு கிடைக்கும்.
பாஜக அரசு கையில் பந்து
"காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது நாடாளுமன்றத்தின் பணி" என கோர்ட்டில் ஏற்கனவே கூறிய மத்திய அரசு, அதை உடனடியாக செய்தாக வேண்டும். ஆனால் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் இருப்பதாலும், தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தாலும், மத்திய அரசு அதை செய்யாது என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. அப்படி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், பாஜக கடும் எதிர்ப்பை தமிழகத்தில் சந்திக்கும் என்பது உறுதி.