குஜராத்: 13 காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்? அடியோடு மறுக்கிறார் காங். தலைவர் பரேஷ் தனானி
அகமதாபாத்: குஜராத்தில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவ முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான பரேஷ் தனானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் என்றாலே காங்கிரஸுக்கு படுஜூரம்தான். அதுவும் 2017-ல் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை காங்கிரஸ் கட்சியால் மறந்திருக்கவே முடியாது.

அப்போது சோனியா காந்தியின் செயலாளர் அகமது படேலை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். அவருக்கு எதிராக காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த்சிங் ராஜ்புத்தை பாஜக வேட்பாளராக அறிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தமது எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது.
மொத்தம் 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற 44 பேர்தான் கர்நாடகாவுக்கு வந்தனர். இதனால் அகமது பட்டேலின் வெற்றி கேள்விக்குறியானது. பின்னர் வாக்கு பதிவின் போது அமித்ஷாவிடம் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்கு சீட்டை காட்டிய விவகாரம் வெடித்தது.
ஒருவழியாக மறுநாள் அதிகாலை அகமதுபடேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போதும் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவக் கூடும் என பாஜக ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் குஜராத் காங்கிரஸில் எந்தவித பிரச்சனையுமே இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications