துர்கா பூஜை இல்லை என்று அரசு சொன்னதா நிரூபிங்க 101 தோப்புக்கரணம் போடுகிறேன் - மம்தா பானர்ஜி
கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேற்கு வங்க அரசு இந்த ஆண்டு துர்கா பூஜையை நடத்தாது என ஒரு வதந்தி பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜை கிடையாது என்று மேற்கு வங்க அரசு சொன்னதாக நிரூபித்தால் மக்கள் முன்னால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன் என்று சவால் விட்டிருக்கிறார்.
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை, தசரா பண்டிகை வரும் அக்டோபர் மாதம் கொண்டாடப்பட உள்ளது. கொல்கத்தாவில் துர்கா பூஜை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு துர்கா பூஜை அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதிவரை கொண்டாடப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் அதிகமாக கூடும் பண்டிகைகள், ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மதுரை சித்திரை திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
அதே போல கொல்கத்தாவில் துர்காபூஜை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு அரசியல் கட்சி துர்கா பூஜை குறித்து வதந்திகளை பரப்புகிறது. துர்கா பூஜை தொடர்பாக இதுவரை திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசு எந்தவொரு கூட்டத்தையும் நடத்தவில்லை. இந்த ஆண்டு துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக யாரேனும் நிரூபித்தால், மக்கள் முன்னால் நான் 101 தோப்புக்கரணம் போடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் : பரங்கிமலை - சென்ட்ரல் வரை 2 வது வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்
கடந்த ஜூலை மாதம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, துர்கா பூஜை கொண்டாடுவதற்கு இன்னும் காலம் உள்ளது. நாம் துர்கா பூஜையை கொண்டாட முடியாமல் போய் விடுமா? பூஜையை கொண்டாட நீங்கள் விரும்பினால், வைரஸ் பரவல் தொடராமல் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதனால், அனைவரும் முறையாக கவனமுடன் செயல்பட வேண்டும். தேவையில்லாமல் ஒன்று கூட வேண்டாம். முக கவசம் அணியுங்கள். இதற்காக முறையாக பிரசாரம் செய்யுங்கள். ஏதேனும் விவகாரம் என்றால் அதுபற்றி போலீசாரிடம் தெரிவியுங்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.