சசிகலாவிற்கு சிறை உணவுதான்.... ஸ்பெசல் சலுகை கிடையாது...- ஐஜி வீரபத்திரசாமி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறை உணவு மட்டுமே வழங்கப்படுகிறது என்று பெங்களூரு சிறைத்துறை ஐ.ஜி.வீரபத்திரசாமி தெரிவித்துள்ளது.
பெங்களூர்: சொத்துக் குவிப்பு மேல் முறையிட்டு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, சிறப்பான சலுகைகள் எதையும் வழங்கவில்லை என, பெங்களூரு சிறைத்துறை ஐ.ஜி.வீரபத்திரசாமி தெரிவித்துள்ளார். சிறை உணவையே அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அஹ்ரகாரா சிறையில் சசிகலா, இளவரசி,சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளியில் இருந்தது உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
சிறப்பு சலுகைகள்
சமீபத்தில் வேலூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சசிகலாவிற்கு எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளுக்கு என்ன சலுகையோ அதுதான் அவருக்கும் வழங்கப்படுகிறது. அதேபோல் வெளியிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கவும் அனுமதி கொடுக்கப்படவில்லை.
சிறை உணவுதான்
மற்ற கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவுதான் அவருக்கு அளிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி யாரையும் சந்திக்க அனுமதி அளிப்பது கிடையாது. அவர் யாரை சந்திக்க விரும்புகிறாரோ அவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.
சலுகை தரமாட்டோம்
கர்நாடகாவைப் பொறுத்த வரையில், சிறைக்கு வந்து விட்டால், சிறை விதிகள் என்ன சொல்கிறதோ, அதைத்தான் பின்பற்றுவோம் என்றும் சிறப்பான சலுகைகள் எதையும் வழங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். பவ்லேறு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சசிகலாவின் நிலை
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொசுக்கடியில் தூக்கமின்றி தவிக்கும் சசிகலா, சிறை உணவை சிரமப்பட்டு உண்டு வருவதாகவும், வெளியில் இருந்து பார்க்க செல்பவர்கள் அளிக்கும் பழங்களை மட்டுமே சாப்பிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.