சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு.. திங்கள்கிழமையும் தீர்ப்பு வர வாய்ப்பில்லை!
சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் திங்கள்கிழமையும் தீர்ப்பு வராது என்று கூறப்படுகிறது.
டெல்லி: சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மேலும் தள்ளிப் போகிறது. திங்கள்கிழமையும் இந்தத் தீர்ப்பு வராது என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி அமித்தவா ராய், பி.சி.கோஷ் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. 8 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை தீர்ப்பைச் சொல்லாமல் உள்ளனர் நீதிபதிகள். கடந்த வாரம் கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இதுகுறித்து நீதிபதிகளிடம் கேட்டபோது இந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்படும் என்றனர். ஆனால் தேதி குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இன்று வரை தீர்ப்பு அளிக்கப்படவில்லை. நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் கோர்ட் விடுமுறை. எனவே திங்கள்கிழமை தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. காரணம், நீதிபதி அமித்தவா ராய் திங்கள்கிழமை விடுமுறை. எனவே அன்று தீர்ப்பு வர வாய்ப்பில்லை.
தற்போதைய நிலவரப்படி செவ்வாய் அல்லது புதன்கிழமைதான் தீர்ப்பு வரும் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் மேலும் தள்ளிப் போகும் வாய்ப்பும் உள்ளதை மறுக்க முடியாது என்கிறார்கள்.
2016ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான தீர்ப்பு ரத்து செய்யப்படும். ஆனால் சசிகலாதான் இங்கு முக்கியமாக பதைபதைப்பில் உள்ளார். அவரது தலையெழுத்து இந்தத் தீர்ப்பில்தான் அடங்கியுள்ளது. இதில் அவர் தண்டிக்கப்பட்டால் அவரது அரசியல் கனவு, முதல்வர் பதவி கனவு ஆகியவை நப்பாசையாகி நாசமாகி விடும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவே முடியாது.
இந்தத் தீர்ப்பைக் காரணமாக வைத்துத்தான் ஆளுநரும் சசிகலாவுக்கு முதல்வராகப் பதவியேற்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் இந்தத் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆனால் அது தொடர்ந்து தாமதமாகி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.