காங்கிரஸிடம் 415 எம்.பிக்கள் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் என்று யாருமே இல்லையே?!
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கு தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால் இதே காங்கிரஸ் கட்சி 1984ம் ஆண்டு லோக்சபாவில் 415 உறுப்பினர்களை வைத்திருந்தபோது 2வது இடத்தைப் பிடித்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க மறுத்த சம்பவம் நடந்துள்ளது.
1984ம் ஆண்டுதான் கடைசியாக ஒரு கட்சி தனி மெஜாரிட்டியைப் பெற்றிருந்த சம்பவமாகும். அதன் பின்னர் தற்போது 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில்தான் பாஜக தனி மெஜாரிட்டியைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறியது.
84ல் காங்கிரஸ் 415 இடங்களில் வென்று அசாத்திய பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. 2வது இடத்தை தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களுடன் பிடித்தது. அது அப்போதுதான் பிறந்த கட்சியாகும். அதேபோல அப்போதுதான் பிறந்திருந்த இன்னொரு கட்சி பாஜக. அக்கட்சிக்கு 2 இடங்களே கிடைத்தன.

தெலுங்கு தேசத்தை நிராகரித்த காங்கிரஸ்
ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தரவில்லை. மறுத்து விட்டது. இப்போது வரலாறு திரும்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட வேண்டி வந்துள்ளது.

சட்டப்படி
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் சட்டத்தின் கீழ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை 1984ம் ஆண்டு அமைந்த நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமல்படுத்தத் தவறியது.

உபேந்திரா
அப்போது தெலுங்கு தேசத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பி.உபேந்திரா தேர்வு செய்யப்பட்டார். அவரைத்தான் எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் செய்யவில்லை. அப்போது சபாநாயகராக இருந்தவர் பல்ராம் ஜாக்கர்.

3 பேர் உரிமை கோரினர்
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு 3 பேர் உரிமை கோரியதாக லோக்சபா பொதுச் செயலாளர் ஜெனரர் சுபாஷ் காஷ்யப் தெரிவிக்கிறார்.

மாவ்லாங்கர் உதாரணத்தைக் காட்டி
ஆனால் லோக்சபாவின் முதல் சபாநாயகர் மாவ்லாங்கரின் நடைமுறையைக் காரணம் காட்டி, மிகச் சிறிய கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தருவதில்லை என்ற முடிவை ஜாக்கர் எடுத்தார்.

ஆனால் சலுகைகளைத் தந்தார்கள்
அப்போது உபேந்திராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், அந்தஸ்தையும் தரவில்லையே தவிர அந்தப் பதவிக்கான அனைத்து சலுகைகளைும் உபேந்திராவுக்கு வழங்கப்பட்டதாக காஷ்யப் கூறுகிறார்.

89ல் எதிர்க்கட்சித் தலைவரான ராஜீவ் காந்தி
1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 195 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்கவில்லை. ராஜீவ் காந்திக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரப்பட்டது.

90ல் அத்வானிக்கு மாறிய பதவி
ஆனால் 1990ல் சந்திரேசகர் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்கு பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்தார் சந்திரசேகர். இப்போது பாஜக எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான அங்கீகாரத்தைக் கோரியது. சபாநாயகரும் கொடுத்தார். ராஜீவ் காந்திக்குப் பதில் அத்வானி எதிர்க்கட்சித் தலைவரானார்.

சட்டத்தில் தெளிவில்லை
1977ம் ஆண்டு சட்டத்தில், யாரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கலாம் என்பதற்கு எந்த வரையறையும் கொடுக்கப்படவில்லை.

10 சதவீத பலம்
அதேசமயம், நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் 10 சதவீத பலத்துடன் உள்ள கட்சிகளுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை சபாநாயகர்கள் கொடுத்து வருவது ஒரு மரபு போல மாறியுள்ளது.

என்ன லாபம் உள்ளது?
தற்போது மிகக் குறைந்த உறுப்பினர்களையேப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரி வருகிறது. ஆனால் லோக்சபா சபாநாயகர் அமைதி காத்து வருகிறார். இதுகுறித்து முன்னாள் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவிக்கையில், இதைத் தடுத்து வைப்பதில் என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. இது தவறான சமிக்ஞையைத்தான் வெளிப்படுத்தும் என்றார்.

சாதாரண விஷயம்தான் - ஜாக்கர்
முன்னாள் சபாநாயகர் ஜாக்கரோ, இது சாதாரண விஷயம்தான். திறந்த மனதுதான் தேவை என்கிறார்.












Click it and Unblock the Notifications