மேகேதாட்டுவில் அணை கட்ட சட்ட பிரச்சனைகள் ஏதுமில்லை – கர்நாடகா முதல்வர் சித்தராமையா
மைசூரு: மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தில் சட்டரீதியாக எந்த் பிரச்சனையும் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சாம்ராஜ்நகரில் ஏரி, குளங்களுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் சித்தராமையா மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார்.
அப்போது அளித்த பேட்டியில் அவர், "கர்நாடகத்தில் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஏரி, குளங்களுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் திட்டம் தொடங்கப்படுகிறது.

முதற்கட்டமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கிவைக்கிறேன். மேலும் மாநிலத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் ஆறு, அணைகளில் இருந்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப வாய்ப்பு உள்ளதோ, அந்த இடங்களில் இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
கர்நாடக-தமிழக எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 2 அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அணை கட்டும் திட்டத்திற்கு சட்டரீதியான எந்த பிரச்சினையும் இல்லை.
அரசியல் லாபத்திற்காக தமிழக அரசியல் கட்சிகள்இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்த அணை கட்டும் வரைவுதிட்ட அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை. முதலில் வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் அணைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications