கட்சியில காசுயில்ல... இடைத்தேர்தலில் போட்டி வேண்டாம்: தேவே கவுடா 'கஞ்சப் பாட்டு'
பெங்களூர்: மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முன்னாள் பிரதமரும் அக்கட்சியின் தேசிய தலைவருமான தேவே கவுடா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியைத் தழுவியது. இதன் பிறகு கட்சியை சீரமைப்பதற்காக கொழும்பு சென்று ஆலோசனை நடத்தினர்.
கொழும்பு ஏன் தெரியுமா?
இதற்கு அக்கட்சி அளித்த விளக்கத்தில், டெல்லி சென்று ஆலோசனை நடத்துகிற செலவை விட கொழும்பு சென்று ஆலோசனை நடத்துவதற்கு செலவு குறைவு என்று கஞ்சப்பாட்டு பாடியது.
சட்டசபை இடைத்தேர்தல்
இந்த நிலையில் அம்மாநிலத்தில் ஷிகாரிபூர், சிக்கோடி சதால்கா, பெல்லாரி சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 21-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக, காங்கிரஸ் வியூகம்
இத்தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக வியூகம் வகுத்து களப்பணியாற்றி வருகின்றன. ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் மவுனமாக இருந்தது.
போட்டி வேணாமே - கவுடா
இந்த நிலையில்தான், சட்டசபை இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட வேண்டாம் என்று தேவே கவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.
காரணம் என்ன தெரியுமா?
இது குறித்து அவர் கூறுகையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிதிநிலைமை மோசமாக இருப்பதால் இடைத்தேர்தலில் யாரும் போட்டியிட வேண்டாம் என்றார். அதே நேரத்தில் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதையும் தேவகவுடா தெளிவுபடுத்தவில்லை.
என்னது கவுடா கட்சியில காசில்லையா? கஞ்சத்தனமா இருக்கே!!