சிகிச்சைக்கு வந்தால் சாகடிக்கிறார்கள் - ஆந்திர அரசு மருத்துவமனையில் மின்சாரம் இன்றி 20 நோயாளிகள் பலி
ஆந்திரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 20 நோயாளிகள் பலியாகியுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.
கர்னூல்: அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 20 நோயாளி மரணம் அடைந்துள்ள பரிதாபம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். தீவிர சிசிக்சைப் பிரிவில் இருந்த 8 ஆண்கள், 4 பெண்கள், 8 குழந்தைகள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த அவலம் நடந்துள்ளது.

தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் உயிர் பாதுகாக்கும் உபகரணங்கள் இயக்க முடியவில்லை. இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெ. வீராசாமி, மின்சாரப் பற்றாக்குறையால் இந்த மரணங்கள் நிகழவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மின்சார கம்பி அறுந்துவிட்டதால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்துவிட்ட நிலையில் அதனை சரி செய்ய மின்சார வாரியத்திடம் புகார் அளித்தோம். ஆனால் மின்சார ஊழியர் வந்து உடனடியாக அதனை சீர் செய்ய வில்லை. அதனால் நீண்ட நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது என்று வீராசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, மருத்துவமனையில் நோயாளிகள் மரணம் அடைந்துள்ளது குறித்து அறிக்கையை கேட்டுள்ளார் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காமினேனி சினிவாஸ். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் 20 பேர் மரணம் அடைந்துள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications