இதுதான் காங்கிரஸ்.. திறமைக்கு மரியாதை இல்லை.. சச்சின் பைலட் பற்றி சிந்தியா கருத்து.. ரகசிய மீட்டிங்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் துணை முதல்வர் சச்சின் பைலட் ஓரம்கட்டப்படுவது வருத்தம் அளிக்கிறது, காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மரியாதை இல்லை என்று முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் எம்பி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர் கொடி தூக்கி இருக்கிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பாக மூத்த தலைவர் அசோக் கெஹ்லட் ஆட்சி செய்து வருகிறார். அங்கு துணை முதல்வராக சச்சின் இருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் முதல்வர் பதவிக்கு பெரிய போட்டி நிலவியது. அதேபோல் இவர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் முற்றியது. இந்த நிலையில் மொத்தமாக ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் திரும்பி இருக்கிறார்.
பாஜகவில் இணைகிறார்
சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறுகிறார்கள். நேற்று இவர்கள் எல்லோரும் டெல்லி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு ஹரியானாவில் இருக்கும் குர்கிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. சச்சின் பைலட் இன்றே பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளது என்றும் கூட கூறுகிறார்கள்.
எத்தனை எம்எல்ஏக்கள்
ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு 124 இடங்கள் உடன் கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 30 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சச்சின் பைலட் முகாமிற்கு சென்றால், அவ்வளவுதான் அசோக் கெஹ்லட் ஆட்சி கவிழ்ந்துவிடும்..
சிந்தியா கருத்து
இந்த நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோதிராதித்ய சிந்தியா செய்துள்ள டிவிட்டில், என்னுடைய முன்னாள் சக கட்சிக்காரர் சச்சின் பைலட்டும் இந்த நிலைக்கு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அவரும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லட் மூலம் ஓரம்கட்டப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. திறமைக்கும், அறிவுக்கும் காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை என்பது நன்றாக தெரிகிறது, என்று சிந்தியா கூறியுள்ளார்.
சிந்தியா யார்
சிந்தியா மற்றும் சச்சின் இருவரும் நேற்று டெல்லியில் ரகசியமாக மீட்டிங் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் 18 வருடமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேசத்தில் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று கோபத்தில் இருந்தார். இதையடுத்து 22 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி அங்கு ஆட்சியை கலைத்தார். இதனால் மத்திய பிரதேசத்தில் ஒரே வருடத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது .