ராகுலை உளவு பார்த்த சர்ச்சை: காங்கிரஸ் முயற்சி தோல்வி… வெளிநடப்பு
டெல்லி: ராகுல்காந்தி பற்றி டெல்லி போலீசார் தகவல் திரட்டியது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து ராஜ்யசபாவில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவை திங்கள்கிழமை காலை கூடியதும் ராகுல் காந்தியின் தனிப்பட்ட விவரங்களை டெல்லி போலீசார் சேகரித்தது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
முக்கிய அரசியல் தலைவர்களை உளவு பார்த்தது மூலம் இந்தியாவின் பெருமை களங்கப்படுத்தப்பட்டுவட்டதாக மாநிலங்களவை காங்கிரஸ் குழு தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார். தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அருண் ஜெட்லி விளக்கம்
அப்போது பேசிய அருண்ஜெட்லி, நீங்கள் இந்த விவகாரத்தை பெரிது படுத்துகிறீர்கள். டெல்லி போலீசார் சட்டத்தின்படி முக்கிய பிரமுகர்களின் அலுவலகத்தில் விவரங்களைச் சேகரிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. 1987ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. டெல்லியில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
2004ல் சோனியா காந்தி பற்றி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதேபோல் தகவல்களை சேகரித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 8 மாதங்களில் இந்த நடைமுறை துவக்கப்படவில்லை. இது காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நடைமுறைதான்.
நீண்ட கால நடைமுறை
நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்து தகவல்கள் திரட்டப்படுவது என்பது நீண்ட கால நடைமுறையில் இருந்து வரும் ஒன்று தான். வழக்கமான நடைமுறைகள் தான் பின்பற்றப்பட்டன. இதில் எவ்வித அரசியலும் இல்லை. இதனை காங்கிரசார் தேவையில்லாமல் அரசியலாக்க வேண்டாம் எனவும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். மேலும் இது போன்று ஏற்கனவே பல தலைவர்கள் குறித்து விவரம் சேகரிக்கப்படுவது வாடிக்கை தான் என்ற பதிலால் காங்கிரசால் பெரும் எதிர்ப்பு எதையும் காட்ட முடியவில்லை.
காங்கிரஸ் முயற்சி தோல்வி
இந்த விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்ற காங்கிரசின் எண்ணம் எடுபடாமல் போனது. ராகுல் குறித்து விசாரிக்கப்பட்ட தகவல் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும், என லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜூன கார்கே கூறினார்.
வெளிநடப்பு
ஆனால் அந்த நோட்டீசை துணைத் தலைவர் குரியன் தள்ளுபடி செய்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கத்தை ஏற்க மறுத்தும் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications