சபரிமலையில் இளம்பெண்கள் சாமி கும்பிடவில்லை.. அமைச்சர் மறுப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததாக வெளியான தகவல் தவறு. அதுபோல் யாரும் தரிசனம் செய்யவில்லை என்று அமைச்சர் மறுத்துள்ளார்.
திருவனந்தபுரம்: சமூகவலைதளங்களில் உலா வருவதை போல சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் யாரும் சுவாமி தரிசனம் செய்யவில்லை என்று கேரள அற நிலையத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பாலக்காட்டை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ததாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்த தேவஸ்வம்போர்டு விஜிலென்சு பிரிவுக்கு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் சபரி்மலையில் சாமி தரிசனம் செய்த இரண்டு பெண்களும் 50 வயதுக்கு மேல் ஆனவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் பம்பையில் போலீஸாரிடம் காண்பித்த ஆதார் அடையாள அட்டை மூலம் இந்த விபரம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தேவஸ்வம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.