மஸ்தான்வலியால் எனது உயிருக்கு ஆபத்தில்லை... நீத்து அகர்வால் திடீர் பல்டி
நகரி: செம்மரக்கடத்தல் வழக்கில் கைதாகி, தற்போது ஜாமீனில் உள்ள நடிகை நீத்து அகர்வால், தயாரிப்பாளர் மஸ்தான் வலியால் தனது உயிருக்கு ஆபத்தில்லை எனத் தெரிவித்துள்ளார்.
செம்மரக்கடத்தல் வழக்கில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது காதலியும், நடிகையுமான நீத்து அகர்வாலையும் போலீசார் கைது செய்தனர்.
நீத்து அகர்வாலின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, அதன் மூலம் செம்மரக்கடத்தல்காரர்களுக்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் மேலும் பலர் சிக்கினர்.
இந்நிலையில், நிபந்தனை ஜாமீனில் விடுதலையான நீத்து அகர்வால், கர்னூல் மாவட்டம் ருத்ரவம் போலீஸ் நிலையத்தில் வாராவாரம் கையெழுத்திட்டு வருகிறார்.
அவ்வாறு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போலீஸ் நிலையத்திற்கு வந்த நீத்து அகர்வால், ‘‘செம்மரக் கடத்தலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மஸ்தான்வலி என்னை சித்ரவதை செய்தார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அவரது ஆட்களால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ருத்ரவரம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்திருந்தார் நீத்து அகர்வால், அப்போது இன்ஸ்பெக்டர் பிரபாகரிடம் அவர் எழுத்துபூர்வமாக கடிதம் ஒன்றை வழங்கினார்.
அதில் அவர், ‘‘என்னை யாரும் மிரட்டவில்லை. மஸ்தான்வலியால் எனது உயிருக்கு ஆபத்து இல்லை'' எனக் கூறியிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நீத்து இத்தகவலை கூறினார். முன்னதாக கொலை மிரட்டல் வருவதாக கூறி இருந்தீர்களே என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நீத்து, "நான் அப்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என்ன பேசுவது என்று தெரியாமல் கூறி விட்டேன்‘‘ என்றார்.
மேலும், ‘செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் நான் குற்றமற்றவள். எனக்கும் செம்மரக்கட்டை கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றும் அப்போது அவர் கூறினார்.
முன்பு மஸ்தான்வலி ஆட்களால், தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறியிருந்த நீத்து அகர்வால், திடீரென இவ்வாறு மாற்றிப் பேசுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.