யாரும் வேண்டுமென்று பலாத்காரம் செய்வதில்லை... சத்தீஷ்கர் அமைச்சர் பேச்சால் புதிய சர்ச்சை
ராய்ப்பூர்: யாரும் வேண்டுமென்றே பாலியல் பலாத்காரம் செய்வதில்லை. வஞ்சகத்தாலேயே அது நடந்து விடுகிறது எனக் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் சத்தீஷ்கர் அமைச்சர் ஒருவர்.
இந்தியா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்ற பிம்பத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தி வருகிறது சமீபத்திய பாலியல் பலாத்கார சம்பவங்கள். அதிலும் குறிப்பாக கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை உலகம் தொடர்ந்து கவனித்து வருகிறது.
தண்டனையை அதிகரித்தால் குற்றங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பில் கடுமையான சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனாலும், இன்றளவும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் சகோதரரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டனர். இப்படுகொலைக்கு ஐநா முதற்கொண்டு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இங்குள்ள அரசியல் தலைவர்கள் சிலர் பலாத்காரத்தை நியாயப் படுத்துவது போல் பேசி சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர். அந்தவகையில், பாரதீய ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தில், மாநில உள்துறை அமைச்சராக உள்ள பாபுலால் கவுர், ‘‘பலாத்காரம் என்பது ஒரு சமூகக் குற்றம். இது சில நேரங்களில் சரியானது, சில நேரங்களில் தவறானது'' எனக் கூறி சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, ‘‘ யாரும் வேண்டுமென்றே கற்பழிப்பதில்லை. வஞ்சகத்தால்தான் பலாத்காரம் நடந்து விடுகிறது'' என புதிய சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார் அதே பாரதீய ஜனதா ஆளும் சத்தீஷ்காரில், மாநில உள்துறை அமைச்சரான ராம்சேவக் பாய்க்ரா. இவர் நேற்று ராய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் நாங்கி ராம் கன்வார் கருத்து தெரிவிக்கையில், ‘‘நாடு முழுவதும் பலாத்கார சம்பவங்கள் பெருகுவதற்கு காரணம், கிரகங்களின் மோசமான நிலைதான்'' என குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது.