காஷ்மீரில் என்ன நடக்கிறது.. ஆளுநரை சந்தித்த பிறகும் குழப்பத்தில் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்தது தொடர்பாகவும், மாநிலத்தில் நிலவும் பதற்றம் குறித்தும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் கூடுதல் துணை ராணுவத்தினர் ஆயிரக் கணக்கில் குவிக்கப்படுகிறார்கள். இது தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில்தான், உமர் அப்துல்லா இன்று காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை சந்தித்து விவரம் கேட்டறிந்தார். "காஷ்மீரின் தற்போதைய நிலைமை பற்றி அறிய விரும்பினேன். நாங்கள் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்கும்போது, ஏதோ நடக்கிறது என்றுதான் அவர்கள் பதில் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
காஷ்மீரிகள் பதற்றப்பட வேண்டாம் என்று ஆளுநர் அறிவித்துள்ளார். ஆனால் அது இறுதி வார்த்தை அல்ல. காஷ்மீர் குறித்த வார்த்தை இந்திய அரசிடமிருந்து வர வேண்டும். எனவே, ஆளுநர் சொன்னதை, இந்திய அரசிடமிருந்து பகிரங்கமாகக் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications