சோம்நாத் கோவிலுக்குள் நுழையும் பிற மதத்தினர் சிறப்பு அனுமதி பெற உத்தரவு!
அகமதாபாத்: குஜராத்தின் சோம்நாத் சிவன் கோவிலுக்குள் நுழையும் பிற மதத்தினர் கட்டாயம் சிறப்பு அனுமதி பெற்றே நுழைய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் சோம்நாத் சிவன் கோவில் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்று. வரலாற்று காலங்களில் பல முறை படையெடுப்புக்குள்ளானது.
தற்போதைய சோம்நாத் கோவிலானது 1947ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்துக்களின் 12 புனித சிவாலயங்களில் இதுவும் ஒன்று.

இந்தக் கோவிலின் டிரஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அத்வானி, கேசுபாய் படேல் என மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். தற்போது இக்கோவிலில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்த கோவிலின் அறக்கட்டளை செயலர் பி.கே.லஹிரி கூறியதாவது:
சோம்நாத் கோவிலுக்கு வருவோரை ஒழுங்குபடுத்தவும் கோவிலின் பாதுகாப்புக்காகவும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக யாரை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பதில் பாதுகாவலர்கள் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.
பர்கா அணிந்த ஒரு பெண் கோவிலுக்குள் நுழைய முயன்றதாகவும் சிலர் கூறுகின்றனர். அதனால் இந்து அல்லாத பிற மதத்தவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கும் முன் சோதனை செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்களில் இந்துக்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. பார்சிகளின் வழிபாட்டு தலத்துக்கு பார்சி அல்லாதவர் செல்ல முடியாது. மெக்கா நகரில் இந்துக்கள் நுழைய முடியாது.
இதனால் சோம்நாத் கோவிலுக்குள் நுழைய பிற மதத்தினர் கட்டாயம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அவர்கள் என்ன நோக்கத்துக்காக கோவிலுக்குள் செல்கிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும்.
இவ்வாறு பி.கே.லஹிரி கூறினார்.












Click it and Unblock the Notifications