அரசியல் அடையாளங்களைத் தாண்டி ஐ.ஐ.டி தேர்வில் சாதித்த அரவிந்த் கெஜ்ரிவால் மகள்…
டெல்லி: டெல்லியின் முன்னாள் முதல்வர் மகளாக பிளஸ் 2 தேர்வில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் படியான மதிப்பெண்கள் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள்.
அவர்தான் தற்போது ஐ.ஐ.டி தேர்விலும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் ஒரு அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி தன்னுடையை தந்தையை பூரித்துப் போகச் செய்துள்ளார் அவர்.

ஐ.ஐ.டி சாதனையாளர்:
ஹர்ஷிதா கெஜ்ரிவால்....அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்ல மகள். அவர்தான் இன்று தனது தந்தையை மீண்டும் ஒருமுறை பெருமைக்கு உள்ளாக்கியுள்ளார். நடந்து முடிந்த ஐ.ஐ.டிக்கான நுழைவுத் தேர்வில் ஹர்ஷிதா 3322ஆவது இடத்தைப் பெற்று மிக எளிதாக வெற்றி பெற்றுள்ளார்.

பிளஸ் 2 தேர்விலும் சாதனை:
தன்னுடைய பிளஸ் 2 தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் ஹர்ஷிதா. தன்னுடைய தந்தையின் அரசியல் சார்ந்த பலத்தை அவர் ஒருபோதும் உபயோகித்துக் கொள்ளவில்லை. அதன்மூலம் ஏற்படும் வெற்றியையும் அவர் விரும்பவில்லை.

அப்பாவும் ஐ.ஐ.டியன்:
அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒரு ஐ.ஐ.டி மாணவர்தான். ஐ.ஐ.டி கரக்பூரில் தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்தவர் அவர். அதன்பின்னர் இந்திய வருமான வரித்துறைக்கான தேர்வில் வெற்றி பெற்று, வருமான வரித்துறை அதிகாரியானார்.

அரசியல் பிரவேசம்:
சமூகத்தின் மேல் இருந்த அக்கறையால் தன்னுடைய பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் முழுநேரமாக ஈடுபட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியும் ஒரு மத்திய அரசு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியாளர்கள் குடும்பம்:
ஹர்ஷிதாவும், அவரதும் சகோதரரும் நல்ல படிப்பாளிகள். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வரானதும், அவர்கள் இருவரும் காசியாபாதிலிருந்து இடம் மாற்றம் அடைந்தனர்.

மகளின் தேர்வுகள்:
கெஜ்ரிவால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அரசாங்க வீட்டை காலி செய்யும் நிலைமை ஏற்பட்டது. ஆனால், தனது மகளின் தேர்வுகள் முடியும்வரை அந்த வீட்டிற்கான வாடகையை தானே அளித்து அங்கு குடியிருந்த கெஜ்ரிவால், மகளின் தேர்விற்குப் பின்பாக காலி செய்தார்.

சுயம் மட்டுமே நிரந்தரம்:
ஹர்ஷிதா தன்னுடைய ஐ.ஐ.டி தேர்வினை எழுதும் போது கெஜ்ரிவால், நிதின் கட்காரி வழக்கில் ஜெயிலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒரு அரசியல்வாதியின் மகள் என்ற அடையாளங்களையெல்லாம் களைந்து விட்டு, எந்த ஒரு இடையூறாலும் மனதை தவறவிடாமல் சுயமாக படிப்பில் ஜெயித்த ஹர்ஷிதா கண்டிப்பாகப் பாரட்டப்பட வேண்டியவர்தான்.












Click it and Unblock the Notifications