என்னம்மா இப்படி.. சூலாயுதத்துடன் விமானத்தில் பயணித்ததாக ராதே மா மீது புகார்
மும்பை: கையில் சூலாயுதத்துடன் விமானப் பயணம் மேற்கொண்டதாக சர்ச்சைப் பெண் சாமியார் ராதே மா மீது புதிய புகார் அளிக்கப் பட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை, 6 பேரை தற்கொலை செய்யத் தூண்டியது, ஆபாச உடை அணிந்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கி, கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப் பட்டு வருகிறார் பெண் சாமியார் ராதே மா.
மும்பை போரிவிலியைச் சேர்ந்த இவர் மீது, கடவுளின் பெயரைச் சொல்லி அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதாகவும், அவரது நடவடிக்கைகள் ஆபாசமாக இருப்பதாகவும் ஒரு வக்கீ்ல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வரதட்சணைப் புகார்...
இதேபோல், ‘வரதட்சணை வாங்கி வரும்படி, கணவர் வீட்டாரை தூண்டி விட்டதாக' ராதே மா மீது பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ராதே மா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

முன் ஜாமீன் மறுப்பு...
இது தொடர்பாக ராதே மா தரப்பில் முன் ஜாமீன் கேட்டு மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாமியாருக்கு முன் ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் இன்று அவர் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். இல்லையெனில் அவர் கைது செய்யப் படலாம்.

புதிய புகார்...
இப்படி, ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கியுள்ள ராதே மா மீது தற்போது மும்பை வழக்கறிஞர் ராஜ்குமார் ராஜ்ஹன்ஸ் என்பவர் மேலும் ஒரு புகார் அளித்துள்ளார்.

சூலாயுதத்துடன் விமானப் பயணம்...
இது தொடர்பாக மும்பை போலீசில் அவர் அளித்துள்ள புகாரில், சமீபத்திய விமானப் பயணங்களின் போது ராதே மா, கையில் சூலாயுதத்துடன் சென்றதாகவும், இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விதிமீறல்...
மேலும், விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போலீசார் விசாரணை?
ஆனால், இந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. இருப்பினும், இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications