இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம்: முட்டுக்கட்டைகள் முழுமையாக தகர்க்கப்பட்டனவா?
டெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தின் முட்டுக்கட்டைகள் எப்படி தகர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தை மூலம் அணுசக்தி உடன்பாட்டில் இருந்த முட்டுக்கட்டை தகர்க்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் காப்பீடு கொடுப்பது யார் என்பதுதான் இதுநாள் வரை முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தை மனதில் கொண்டு இந்திய நாடாளுமன்றத்தில், அணு உலைகளை தயாரிக்கும் நிறுவனங்களே விபத்து ஏற்பட்டால் பொறுப்பு என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை ஏற்க அமெரிக்கா நிறுவனங்கள் தயாராக இல்லை. இதுதான் இருநாடுகளிடையேயான வர்த்தக அணுசக்தி உடன்பாட்டில் இருந்த முட்டுக்கட்டை.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் இந்தியாதான் எதிர்கொள்ள வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது. ஆனால் இதற்கு இந்தியா உடன்படவில்லை. இறுதியாக விபத்துகளுக்கு நட்ட ஈடாக காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த உடன்பாட்டின் இதர அம்சங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இரு நாட்டு தலைவர்களும் முட்டுக்கட்டை வெற்றிகரமாக தகர்க்கப்பட்டுவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
மேலும் காப்பீட்டுத் திட்டம் குறித்த தெளிவான விளக்கமும் தெரியப்படுத்தப்படவில்லை. யார் எவ்வளவு தொகையை காப்பீட்டுக்கு செலுத்த வேண்டும் என்பது குறித்தும் விரிவாக தெரியவரவில்லை.
வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் கூறுகையில்,அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் 3 காப்பீட்டு நிறுவனங்கள் 7.5 பில்லியன் தொகையை இத்திட்டத்துக்கு செலுத்த வேண்டும்; எஞ்சிய தொகையை அரசு படிப்படியாக செலுத்தும். மொத்தம் 26 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என்றார்.
இந்திய சட்டப்படியான விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோர் அணு உலைகளை நிறுவிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடரலாம் என்ற பிரிவுக்கும் அமெரிக்கா நிறுவனங்கள் ஆட்சேபம் தெரிவித்தன. இதற்கு தீர்வாக தற்போது ரூ1,500 கோடிக்கான நிதியம் ஒன்றை அமைத்து பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் அணு உலைகள் கண்காணிப்பு தொடர்பான அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து இந்தியத் தரப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. இருநாடுகளின் சட்ட ஆலோசனைக் குழுக்கள் இது குறித்து பரிசீலிக்கும் என்றும் தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications