ராஷ்ட்ரபதி பவனில் 21 குண்டுகள் முழங்க ஒபாமாவுக்கு பாரம்பரிய வரவேற்பு
டெல்லி: ராஷ்ட்ரபதி பவன் வந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அதன் பிறகு ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் பீஸ்ட் காரில் டெல்லியில் உள்ள ஐடிசி மவ்ரியா ஹோட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு ஒபாமா ராஷ்ட்ரபதி பவன் வந்தார்.

அவரது கார் ராஷ்ட்ரபதி பவனுக்குள் நுழைந்த உடன் 21 குண்டுகள் முழங்கின. காரில் இருந்து இறங்கிய ஒபாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், மோடியும் வரவேற்றனர். இதையடுத்து ஒபாமா முப்படையினர் அளித்த பாரம்பரிய மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இம்முறை விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் பூஜா தாகூர் ஒபாமாவை அழைத்துச் சென்று முப்படையின் மரியாதையை ஏற்றுக் கொள்ள வைத்தார். அதன் பிறகு மோடியும், பிரணாபும் ஒபாமாவை அழைத்துச் சென்று பந்தலில் இருந்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்யா நாயுடு, மனோகர் பாரிகர் மற்றும் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்த சந்திப்பை அடுத்து ஒபாமா ராஷ்ட்ரபதி பவனில் இருந்து கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications