ஒடிஷா: பத்ம ஸ்ரீ பெயரை வேட்பாளர் பயன்படுத்த தடை

ஒடிசாவில் வரும் 10 மற்றும் 17 தேதிகளில் இரண்டு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சுந்தர்கர் தொகுதியில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் திலிப் டிர்கே என்பவர் போட்டியிடுகிறார்.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த இவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. வாக்கு கேட்பது போல் இவர் வெளியிட்டுள்ள சுவரொட்டி மற்றும் கைப்பிரதிகளில் ‘பத்மஸ்ரீ' திலிப் டிர்கே என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பா.ஜ.க. வேட்பாளர் ஹேமானந்தா பிஸ்வால் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதனையடுத்து, பெயருக்கு முன்னர் ‘பத்மஸ்ரீ' என்று குறிப்பிடுவதற்கு தடை விதித்து சுந்தர்கர் மாவட்ட தேர்தல் கமிஷன் திலிப் டிர்கே-வுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக சுந்தர்கர் மாவட்ட தேர்தல் அதிகாரி அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் போன்றவற்றில் பத்மஸ்ரீ பட்டத்தை குறிப்பிடுவது நியாயமற்றது. இது வாக்காளர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.
எனவே, நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரங்களில் காணப்படும் ‘பத்மஸ்ரீ' என்ற அடைமொழியை உடனடியாக நீக்க வேண்டும்' என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications