ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த கனிமொழி.. ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கடிதம்!
புவனேஸ்வர் : கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை இல்லாமல் செய்ய போராடி வருவதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், அதை பல்வேறு மாநிலங்கள் எதிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தந்த கடிதத்துடன் திமுக எம்பி கனிமொழி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்தார்.
நீட் நுழைவு தேர்வு கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைத்து வருவதாக ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. அதிமுகவும் இதை எதிர்த்து வருகிறது . ஆனால் பாஜக தலைமையிலன மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து வருகிறது. ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்து வருகிறது.
இதனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுகி தீர்வு பெற வேண்டும் என்று முடிவெடுத்தது. இதன்படியே நீட் தேர்வினால் ஏற்பட்ட சாதக மற்றும் பாதகங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து மக்களிடம் கருத்துக்களை கேட்டது.

கருத்துக்கள்
மக்களிடம் பெரும்பாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே கருத்து வந்தது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும், பெரிய பயிற்சி நிறுவனங்களில் கோச்சிங் செல்பவர்கள் மற்றும் திரும்ப திரும்ப தேர்வு எழுதுபவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதையும் இந்த குழு வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.

நீட் தீர்மானம்
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அளித்த அறிக்கைக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. நீட் தேர்வுக்கு எதிராக சட்ட ரீதியாக கருத்துக்களையும் தீர்மானத்தில் முன்மொழிந்துள்ளது திமுக அரசு. இந்த தீர்மானத்தை விரைந்து ஏற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தர வேண்டும் என்பதற்காக அண்மையில் ஆளுநர்ஆர்.என்.ரவியை ஸ்டாலின் சந்தித்து பேசினார்,

நீட் தேர்வு வேண்டாம்
இது ஒருபுறம் இருக்க, நீட் தேர்வுக்கு எதிராக முடிகளை எடுக்க வேண்டும் என்று கோரி, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா உள்பட பாஜக ஆளாத ஏழு மாநிலங்களின் முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில தான் நீட் தேர்வு ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவின் அறிக்கைகளுடன் சென்று ஒவ்வொரு மாநில முதல்வரிடமும் ஆதரவு திரட்டும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் இறங்கி உள்ளார்.

கனிமொழி சந்திப்பு
அதன் ஒருபகுதியாக திமுக எம்பி கனிமொழி, ஒடிசா முதல்வர் நவின்பட்நாயக்கை சந்தித்து பேசினார். நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை கனிமொழி சமர்பித்தார். அத்துடன் நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்பு குறித்த அறிக்கையையும் சமர்பித்தார். இதை பரிசீலிப்பதாக உறுதி அளித்த ஒடிசா முதல்வர் நவீட் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி உடனான சந்திப்பு குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஸ்டாலின் முயற்சி
முன்னதாக கடந்த இரண்டு நாள் முன்பு திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து
நீட் தேர்வுக்கு எதிரான முதல்வரின் கடிதத்தை அளித்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த முயற்சி தேசிய அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக விவாதிக்கப்படுகிறது












Click it and Unblock the Notifications