கொரோனா ஒழிய.. கோயிலுக்கு வந்தவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி.. ஒடிஸாவில் திக் சம்பவம்
புவனேஸ்வரம்: ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் கடவுளை திருப்திப்படுத்தி கொரோனா நோயை முடிவுக்கு கொண்டு வர 72 வயது சாமியார் ஒருவர், 52 வயது நபரை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள், போலீஸார், தூய்மை பணியாளர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் என அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அது ஒரு புறம் இருக்க, மறுபுறம் இந்த தாயத்தை கட்டினால் கொரோனா அண்டாது, இந்த யாகத்தை செய்தால் வராது என பல்வேறு மூடநம்பிக்கைகள் கிளப்படுகின்றன.

கொரோனா
இந்த நிலையில் ஒடிஸா மாநிலத்தில் கட்டாக்கில் கடவுளை திருப்திப்படுத்தவும் கொரோனா ஒழியவும் 72 வயது சாமியார் ஒருவர் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டாக் மாவட்டத்தில் பந்தாஹூடா பகுதியில் பந்தா மா புத்தா பிராமணி டே கோயில் உள்ளது.

கட்டளை
இந்த கோயிலின் பூசாரியாக சன்சாரி ஓஜா (72) உள்ளார். புதன்கிழமை அன்று கோயிலுக்கு சரோஜ் குமார் பிரதான் (52) என்பவர் வந்துள்ளார். அப்போது அவரிடம் தெய்வத்தை திருப்திப்படுத்தவும் கொரோனா ஒழியவும் உன்னை நரபலி கொடுக்குமாறு கடவுள் கட்டளையிட்டுள்ளார் என பூசாரி கூறியுள்ளார்.

பூசாரி
இதனால் கோபமடைந்த பிரதான் அவரிடம் சண்டையிட்டுள்ளார். எனினும் விடாத பூசாரி, நீ கொரோனா ஒழிய உன் உயிரை தியாகம் செய் என திரும்ப திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் பிரதானை கூர்மையான ஆயுதத்தால் பூசாரி கடுமையாக தாக்கியுள்ளார். அதில் அந்த நபர் சம்பவ இடத்தில் இறந்துள்ளார். பின்னர் அவரது கழுத்தை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.

விசாரணை
இதையடுத்து அந்த பூசாரி தானாகவே போலீஸிடம் சென்று சரணடைந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த நபரை கொலை செய்யுமாறு கனவில் கடவுள் கட்டளையிட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். ஆனால் இறந்த நபருடன் மாங்காய் தோப்பு தொடர்பாக நீண்ட நாளாக பூசாரிக்கு தகராறு இருந்து வந்தது என கிராமத்தினர் கூறுகிறார்கள். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட பூசாரி
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் பூசாரி சம்பவம் நடந்த நேரத்தில் நன்றாக குடித்திருந்தார். பின்னர் காலையில் உண்மை தெரியவந்ததை அடுத்து குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தார். நரபலி கொடுத்தால் கொரோனா குறையும் என்றும் அந்த சாமியார் வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்த போலீஸார் பூசாரிக்கு மனநலம் பாதித்தது போல் உள்ளது என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications