லூதியானா: ஓலா கேப்ஸ் சிஇஒ பவிஷ் அகவர்வாலின் பாட்டி, அத்தை படுகொலை
லூதியானா: ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வாலின் பாட்டி மற்றும் அத்தை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பவிஷ் அகர்வால் லூதியானாவில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் மருத்துவர்கள். பவிஷ் அகர்வாலின் பாட்டி மற்றும் உறவினர்கள் பஞ்சாப் காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி பவிஷ் அகர்வாலின் பாட்டி புஷ்பவதி அகர்வால், 84, சரிதா அகர்வால் 57 ஆகியோர் கொடூரமுறையில் கொல்லப்பட்டிருந்தனர்.
புஷ்பாவதி அகர்வால், பவிஷின் தாய்வழி பாட்டி ஆவார். அத்தை டாக்டார் சரிதா அகர்வால் மகப்பேறு மருத்துவர். இவர்கள் இருவரும் ஷெர் இ பஞ்சாப் காலனியில் உள்ள அவர்களது வீட்டில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தலை, தொண்டை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. சுத்தியல் போன்ற ஆயுதத்தால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளன.
இந்தக் கொலை தொடர்பாக வீட்டு வேலைக்காரப் பெண் பூஜாவைப் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது பூஜா கடுமையாக தாக்கப்பட்டதாக புதிய சர்ச்சையும் வெடித்துள்ளது. கொலை நடந்த தினத்தன்று பிற்பகல் 1.30 மணியளவில் இரு கொலைகளும் நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 12.43 மணியளவில் பூஜாவின் செல்போனிலிருந்து ஒரு எண்ணுக்கு மிஸ்ட் கால் போயுள்ளது. சில விநாடிகள் மட்டுமே அந்த எண் டடயல் செய்யப்பட்டு கட் ஆகியுள்ளது. அந்த எண்ணை போலீஸாரால் கண்டு பிடிக்கமுடியவில்லை.
வேலைக்காரப்பெண் பூஜாதான் கொலையை முதலில் பார்த்தவர். மேலும் அவரது செல்போனிலிருந்து மிஸ்ட் கால் போயிருந்ததால் பூஜாவை 2 நாட்கள் காவலில் வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ஆனால் அவரது குடும்பத்தினர் இந்த விசாரணைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறவினர்கள் போராட்டத்தில் குதித்ததைத் தொடர்ந்து பூஜாவை போலீசார் விடுவித்துள்ளனர்.
பூஜாவை போலீஸ் காவலின்போது கடுமையாக தாக்கியதாகவும், குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். மேலும் பெரோஸ்பூர் சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டு வேலைக்காக லூதியானாவில் வந்து தங்கியுள்ளனர். பூஜாவுக்கு ஏற்பட்ட கதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வீட்டு வேலையில் ஈடுபட்டு வரும் தங்களைப் போன்றவர்கள் அடுத்தவாரம் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையே பாவிஷ் அகர்வலின் தந்தை என்.கே. அகர்வால் கூறுகையில், எந்த உண்மையையும் கண்டறியாமல் பூஜாவை போலீஸார் விட்டுள்ளனர். அவர் யாருக்குப் போன் செய்தார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அது தவறு. யாருடைய நெருக்கடியில் அவரை போலீஸார் விடுவித்தனர் என்பது தெரிய வேண்டும் என்றார். மேலும் லூதியானா போலீஸ் கமிஷனர் பரமராஜ் உமாரங்காலையம் அவர் சந்தித்து மனு கொடுத்தார்.