இறுதிச்சடங்குக்கு பணமில்லை.. வங்கி வாசலில் மனைவி உடலுடன் 3 மணி நேரம் காத்திருந்த முதியவர்!
ராஜஸ்தானில் முன்னிலால் என்ற முதியவரின் மனைவி புற்றுநோயால் இறந்துபோனார். அவரது இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாததால் முதியவர் 3 மணி நேரம் வங்கி வாசலில் மனைவி சடலத்துடன் காத்திருந்தார்.
ஜெய்ப்பூர்: புற்றுநோயால் இறந்து போன மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் வங்கி வாசலில் மனைவி சடலத்துடன் முதியயவர் ஒருவர் 3 மணி நேரம் காத்திருந்தார். தனது அக்கவுண்டில் உள்ள பணத்தையே எடுக்க முடியாமல் அவர் பெரும் சிரமத்திற்கு ஆளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் நோடியா கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் முன்னிலால். இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த திங்கட் கிழமை உயிரிழந்தார்.
மனைவியின் இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்த அவர், தனது மகனின் கணக்கில் போடப்பட்ட 16000 ரூபாய் பணத்தை எடுக்க மனைவியின் உடலுடன் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி வாசலில் மனைவியின் உடலுடன் காத்திருந்த அவர் இறுதிச்சடங்குக்கு பணம் தேவை எடுக்க உதவுங்கள் என வங்கி ஊழியர்களிடம் கெஞ்சியுள்ளார்.
ஆனால் அவர் பொய் கூறுவதாக நினைத்த வங்கி ஊழியர்கள் அவருக்கு உதவ மறுத்துவிட்டனர். பின்னர் வங்கியும் பூட்டப்பட்டுவிட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த முதியவர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
இதனையறிந்த போலீஸ்காரார் ஒருவர் 2500 ரூபாயும் அரசியல்வாதி ஒருவர் 5000 ரூபாயும் வழங்கியுள்ளனர். இந்தத் தொகையை வைத்து முன்னிலால் அவரது மனைவியின் இறுதிச்சடங்கை செய்து முடித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் புற்றுநோயால் இறந்துப்போன முதியவரின் இறுதிச்சடங்குக்கு வங்கி மேலாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் 7000 ரூபாய் கடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.