இந்திராவின் சம்மந்தியாக மறுத்தவர்.... ஓல்ட் மங் உருவாக்கிய கபில் மோகனின் அடடே 'லிங்க்ஸ்'
சஞ்சய் காந்திக்கு பெண் கேட்டும் இந்திரா காந்தியின் சம்மந்தியாக மறுத்தவர்தான் ஓல்ட் மங் கபில் மோகனாம்.
Recommended Video

டெல்லி: ஓல்ட் மங் ரம் மதுபானத்தை உருவாக்கிய மாஜி பிரிகேடியர் கபில் மோகன் திரைமறைவில் இந்திய அரசியலின் பல திடுக்கிடும் திருப்பங்களுக்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறார்.
பிரிகேடியர் (ஓய்வு) கபில் மோகன் கடந்த சனிக்கிழமையன்று உ.பி.யின் காசியாபாத்தில் காலமானார். அவரது மறைவுச் செய்தி ஊடகங்களில் தாமதமாகவே பதிவாகி வருகிறது.
கபில் மோகன் ஒரு தொழிலதிபர் என்பது நாடறிந்த உண்மை. 2010-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. கபில் மோகன் ஒரு தொழிலதிபர் மட்டும்தானா? 'நெவர்' என பதில் சொல்கிறது இந்திய அரசியலில் எழுதப்படாத பக்கங்கள்.

ஜனதா அரசு
ஏனெனில் அந்த எழுதப்படாத பக்கங்களின் சாட்சியாக, பங்குதாரராகவும் இருந்திருக்கிறார் கபில் மோகன். 1970களில் இந்திய அரசியலில் பெரும் புயலே வீசியது. இந்தியாவின் கறுப்பு பக்கமாக அவசர நிலை அமலுக்கு வந்தது, இதனால் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பறிகொடுக்க பல கட்சிகள் இணைந்த ஜனதா அரசு உருவானது.

சஞ்சய் காந்தி சந்திப்பு
ஆனால் ஜனதா அரசில் இடம்பெற்றிருந்த ராஜ் நாராயண் சர்ச்சைகளின் சங்கமமாக இருந்தார், இதனால் ஜனதா அரசு நிலைக்காமல் கவிழ்ந்து. இதில் கபில் மோகன் எங்கே வருகிறார்? ஜனதா அரசில் இருந்த ராஜ் நாராயண், இந்திராவின் அரசியல் வாரிசாக இருந்த சஞ்சய் காந்தியுடன் ரகசிய தொடர்புகளை வைத்திருந்தார். ராஜ்நாராயணனை பயன்படுத்தி ஆட்சி கவிழ்க்கப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு. சஞ்சய் காந்தியுடனான இந்த ரகசிய சந்திப்புகள் அதிகம் நிகழ்ந்தது ஓல்ட் மங் கபில் மோகனின் டெல்லி பூசா ரோடு பங்களாவில்தான் என்கிறது 'வரலாறு'.

மறுத்த கபில் மோகன்
இந்த அளவுக்கு இந்திரா குடும்பங்களில் ஒன்றாகத்தான் இருந்தார் கபில் மோகன். ஒருகட்டத்தில் கபில் மோகனின் மகளை சஞ்சய்காந்திக்கு இந்திரா காந்தி பெண் கேட்டார்; ஆனால் கபில் மோகன் மறுத்துவிட்டார். இதனால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டது என்கிற வரலாற்று கதைகளும் இருக்கின்றன.

மாருதியில் கபில் மோகன்
அதேபோல் சஞ்சய் காந்தியின் கோமாளித்தனம் என விமர்சிக்கப்படுகிற மாருதி கார் தொழிற்சாலை தொடங்கியதிலும் பங்குதாரராக இருந்தவர் கபில் மோகன். இது தொடர்பாக 1970களில் பெரும் அக்கப்போரே நிகழ்ந்தது, சரி வாஜ்பாய் எங்கப்பா இதிலே வருகிறார்?

ஆர்எஸ்எஸ் உடன் இணக்கம்
1980களில் இந்திரா காந்தியின் இரண்டாம் இன்னிங்ஸ் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ்-ன் பரிணாம வளர்ச்சியாக பாஜக உதயமானது. இந்த காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ்- இயக்கம் மீது மென்மை போக்கை இந்திரா கடைபிடித்தார்.

கபில் மோகன் பங்களாவில்
இந்திராவின் இந்த அரசியல் நடவடிக்கைக்கு உதவியாக இருந்தவர் ராஜீவ்காந்தி. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்களை ராஜீவ் காந்தி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற இடமும் கபில் மோகனின் பூசா ரோடு பங்களாதான்.

புகைப்படங்கள்
இதே பங்களாவில்தான் அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்- பாஜக தலைவர்கள் அரசியல் ஆலோசனைகளை நடத்தியிருக்கின்றனர். இது போகிற போக்கிலான கருத்து அல்ல. புகைப்படங்களும் சாட்சிகள். டெல்லியில் மட்டுமல்ல காசியாபாத்தில் கபில் மோகன் கட்டமைத்திருக்கும் மோகன் நகர் சாம்ராஜ்யமும்தான் இந்தியாவின் எழுதப்படாத திரமறைவு அரசியல் ஆடுகள மைதனாமாக இருந்திருக்கிறது,












Click it and Unblock the Notifications