குஜராத்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரியை சுற்றி "வைஃபை" கட்: சூரத் கலெக்டர்
குஜராத் சூரத் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரியை சுற்றி வைஃபை வசதி துண்டிக்கப்பட்டு உள்ளது.
சூரத் : குஜராத் மாநிலம் சூரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ள கல்லூரியை சுற்றி வைஃபை வசதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதாக சூரத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் கடந்த 9 மற்றும் 14 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதனால் குஜராத் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பா.ஜ.க அவற்றை ஹேக் செய்யும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறி காங்கிரஸார் தீவிரமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் இடங்களைச் சுற்றி கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூரத் மாவட்டம் காம்ரெஜ் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஜரிவாலா அளித்த புகாரின் பேரில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் காந்தி பொறியியல் கல்லூரியை சுற்றிலும் வைஃபை வசதி துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அசோக் ஜரிவாலா கூறும்போது, நாங்கள் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே வைஃபை வசதியை துண்டிக்க மனு கொடுத்து இருந்தோம். ஆட்சியரின் உத்தரவுக்கு பிறகும் தற்போது மீண்டும் அதே வைஃபை இணைப்பு செயல்பட்டு வருகிறது. இதை வைத்து பா.ஜ.க.,வினர் இயந்திரங்களை ஹேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றார்.
இந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மகேந்திர பட்டேல், கல்லூரிக்குள் மற்றும் அதனை சுற்றி இருக்கும் அனைத்து வைஃபை இணைப்புகளையும் துண்டிக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். இந்த இணைப்புகளை பயன்படுத்தி இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது எனினும் காங்கிரஸ் வேட்பாளரின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்தக் கல்லூரியில் ஒல்பாட், மாண்ட்வி, மகுவா, வியாரா, காம்ரெஜ், மங்ரோல் ஆகிய ஆறு தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications