ஸ்வச் பாரத் போல குற்றமில்லா இந்தியாவை மோடி உருவாக்க வேண்டும்: நிர்பயாவின் தாய்
டெல்லி: சுத்தமான இந்தியா போன்று குற்றமில்லா இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி ஏதாவது திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன் என நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிசியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அவர் அதே ஆண்டு டிசம்பர் 29ம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார்.

நிர்பயா இறந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நிர்பயாவின் தாய் கூறுகையில்,
நம் சமூகத்தில் வலுவான மாற்றம் ஏற்பட வேண்டும். பெரும்பாலான பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகள் உறவினராகவோ, நண்பராகவோ, தெரிந்தவராகவோ இருக்கிறார்கள். சமூகத்தின் மனநிலை மாறாதவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையாது. இது போன்ற வழக்குகளில் சட்டம் கடுமைாக இருக்க வேண்டும்.
சட்டத்தை மாற்ற வேண்டும் என்பது தான் அரசிடம் நாங்கள் தொடர்ந்து எதிர்பார்ப்பது. மைனர்களை தண்டிக்க முடியாது என்பதால் அவர்கள் துணிச்சலுடன் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். பெண் டாக்டர் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் மைனர். சுத்தமான இந்தியா போன்று குற்றமில்லா இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி ஏதாவது திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications