டெல்லியில் குண்டுவெடிப்பு ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்; போலீஸார் தீவிர விசாரணை
டெல்லி: டெல்லியில் முக்கிய பகுதியில் நேற்று காலை குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் முக்கிய பகுதியான சாந்தினி சவுக் நயா பஜாரில் நேற்று காலை 10.30 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், இந்த சம்பவத்தால் அருகிலுள்ள கட்டிடத்தின் ஜன்னல் பகுதிகள் சேதமடைந்தன.
இதையடுத்து தீவிரவாத தடுப்பு படையினர், தடய அறிவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். குண்டுவெடித்த இடத்துக்கு அருகே சணல் பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
குண்டு வெடித்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள தடயங்களின் அடிப்படையில் இதனுள் பட்டாசுகளை இணைத்து வெடிகுண்டு தயாரித்து அதனை வெடிக்க செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.