அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 1 லட்சம் முஸ்லிம்கள் ஆதரவு...அள்ளி விடும் பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ்
மீரட்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் செய்தியாளர்களிடம் சாக்ஷி மகாராஜ் கூறியதாவது:
உலகிலேயே முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக வாழும் நாடு இந்தியாதாதான். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நலத்திட்டங்களால் பெருமளவில் பயனடைவோர் முஸ்லிம்களே.
பாகிஸ்தானுடன் பிரதமர் மோடி பேசினாலும் பேசாவிட்டாலும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையாக்குகின்றனர். முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார், மமதா பானர்ஜி, கேஜ்ரிவால் ஆகியோர் இந்த தேசத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள்.
பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் பசுவதை தடுப்பு சட்டத்தை முழுமையாக செயல்படுத்து வருகின்றனர். பீகார் சட்டசபை தேர்தல் வரை சகிப்பின்மை பற்றி பேசியவர்கள் இப்போது மவுனியாகிவிட்டார்கள்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் முஸ்லிம்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு சாக்ஷி மகாராஜ் கூறினார்.