ஹூடாவைக் கிண்டலடித்த விவகாரம்: மோடியைப் புறக்கணிக்கும் காங். முதல்வர்கள்...!
டெல்லி: ஹரியானா முதல்வர் பூபீந்தேர் சிங் ஹூடாவை, சண்டிகரில் நடந்த மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியின்போது பாஜகவினர் கேலி கிண்டல் செய்து பேச விடாமல் தடுத்ததால், அவர் இனிமேல் மோடியுடன் மேடை ஏற மாட்டேன் என்று அறிவித்துள்ளார். தற்போது மேலும் சில காங்கிரஸ் முதல்வர்களும் மோடியுடன் மேடை ஏற மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
குறிப்பாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் காங்கிரஸ் முதல்வர்கள் மோடியுடன் மேடை ஏறுவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் பிருத்வி ராஜ் சவான், நாக்பூரில் இன்று மோடி கலந்து கொள்ளும் மெட்ரோ ரயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். அதேபோல ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும், ராஞ்சியில் இன்று நடைபெறும் விழாவில் மோடியுடன் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
கிண்டலடிப்பதை ஏற்க முடியாது
இதுகுறித்து பிருத்விராஜ் சவான் கூறுகையில் சமீபத்தில் ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சிகள் நாகரீகமானவை அல்ல. பிரதமரின் முன்பாகவே மாநில முதல்வரை கிண்டல் செய்வதை ஏற்க முடியாது. நாட்டின் பெடரல் அமைப்புக்கு வேட்டு வைக்கும் செயல் இது. இப்படிப்பட்ட நிலையில் நான் மோடியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று கூறினார்.
சோனியாவுக்கு காங். கோரிக்கை
முன்னதாக மோடியுடன் காங்கிரஸ் முதல்வர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தடை செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கட்சித் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நான்கு மாநிலத் தேர்தல்
தற்போது காங்கிரஸ் அல்லது அதன் நட்புக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை மனதில் வைத்து தற்போது இந்த மாநிலங்களுக்கு மோடி சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிக்கிறோம்- பாஜக
ஆனால் காங்கிரஸ் முதல்வர்களின் புகாரை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானாவாஸ் ஹூசேன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் அனைத்து முதல்வர்களையும் மதிக்கிறோம். யாராக இருந்தாலும் மதிப்போம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை என்றார்.
திட்டமிட்டு திட்டுகிறார்கள்
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில் காங்கிரஸ் முதல்வரின் கவலையில் நியாயம் உள்ளது. பாஜகவினரின் செயல்களுக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு பிரதமர் வரும்போது முதல்வர் சோரன் கவனமாக இருக்க வேண்டும்.
சுயமரியாதை இருந்தால்
காங்கிரஸ் முதல்வர்கள் மட்டுமல்ல, சுயமரியாதை உள்ள அனைத்து முதல்வர்களுமே மோடியின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகள் என்ற பெயரில் இப்படிப்பட்ட கூத்துக்கள் அரங்கேற வழி கொடுக்கக் கூடாது என்றார் அகமது.