தவறுதலாக பிரதமர் மோடியை ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்றழைத்த ராகுல்...
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தவறுதலாக பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் எனக் குறிப்பிட்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலை ஒட்டி அங்கு கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கடந்த காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், ‘கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்ல. நாட்டிற்காக என்ன செய்தார்கள் என்று அவர்களால் பட்டியல் இட முடியுமா?" என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், நேற்று மகாத் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. அப்போது அவர் மோடியின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார். ஆனால், தவறுதலாக மோடியை எதிர்க்கட்சித் தலைவர் எனக் குறிப்பிட்டு விட்டார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, "கடந்த 60 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாட்டின் நிலைமையை அவர் ஒருவரே தூக்கி நிறுத்தப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தேசத்துக்காக உழைத்த அம்பேத்கர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு ஆகியோரின் தியாகங்களை என்ன செய்வது? நாட்டின் வளர்ச்சிக்கு மக்களாகிய நீங்களும் உங்களது முன்னோர்களும் தான் காரணம்.
உங்களது வியர்வையும், ரத்தமும் தான் இந்த நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications