மீண்டும் விளவங்கோடு வாய்ப்பு... விஜயதரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் உண்ணாவிரதம்
டெல்லி: விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளராக விஜயதரணி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்தொகுதி காங்கிரசார் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். வேட்புமனுத் தாக்கலும் நடந்து வருகிறது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் தங்களது வேட்பாளரை மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட தொகுதி கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் நெருக்கடிகளைத் தொடர்ந்து பல தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது காங்கிரசிலும் வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதிக்கு விஜயதரணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சட்டசபைத் தேர்தலில் அதே தொகுதியில் தான் அவர் போட்டியிட்டு வென்று, எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அவர் தொகுதி பக்கமே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விஜயதரணியை மாற்றக்கோரி அத்தொகுதி காங்கிரசார் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் அவர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சர்ச்சைகளில் சிக்கினார் விஜயதாரணி. இந்நிலையில், தற்போது விளவங்கோடு காங்கிரசாரின் உண்ணாவிரதப் போராட்டத்தால் விஜயதாரணியின் வேட்பாளர் வாய்ப்பு சிக்கலில் சிக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications