“பாஜகவில் ஐக்கியமான அமலாக்கத்துறை”.. ஹேமந்த் சோரன் கைதுக்கு.. இந்தியா கூட்டணி தலைவர்கள் சரமாரி கண்டனம்
ராஞ்சி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது அரசியல் பழிவாங்கல் என அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது.

இப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வை முன்கூட்டியே கணித்த சோரன், கடந்த ஆண்டு தானே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்தினார். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் அவரது ஆட்சி தப்பியது. இருப்பினும், வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை 9 முறை சம்மன்களை அனுப்பியிருந்தது.
இதற்கிடையில், கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து கடந்த 29ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டை மேற்கொண்டனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த போதிலும் அதிரடி ரெய்டு மேற்கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் விமர்சித்தனர்.
இப்படி இருக்கையில் நேற்றிரவு ஹேம்ந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஆளுநரை சந்தித்தபோது அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றிருந்தனர். கடிதம் வழங்கப்பட்ட உடனேயே அவர் கைது செய்யப்பட்டார். இவருடைய கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கூறுகையில், "பி.எம்.எல்.ஏ.வின் விதிகளை கொடூரமானதாக ஆக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவது பிஜேபியின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சதியின் ஒரு பகுதியாக எதிர்கட்சி அரசுகளை ஒவ்வொன்றாக சீர்குலைக்கும் பா.ஜ.க.வின் வேலை தொடர்கிறது" என கூறியிருந்தார்.
ராகுல் காந்தி, "அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் வருமான வரித்துறை (IT) துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருக்கவில்லை. அவை 'எதிர்க்கட்சிகளை ஒழிக்கும்' பாஜகவுடன் ஐக்கியமாகிவிட்டன. ஊழலில் மூழ்கியிருக்கும் பாஜக, அதிகார வெறியில் ஜனநாயகத்தை அழிக்கும் பிரச்சாரத்தை நடத்துகிறது" என இந்தியில் x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, "மோடி ஆட்சி, எதிர்க்கட்சிகளுக்கு எதிரான போரின் வெட்கக்கேடான விரிவாக்கம்" என்று விமர்சித்துள்ளார். மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தங்கள் எம்எல்ஏக்கள் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சம்பாய் சோரனை ஆதரிப்பாரகள் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவின் ராஜ்யசபா எம்.பியான பிரியங்கா சதுர்வேதி, "சிபிஐ, அமலாக்தக்துறை, வருமான வரித்துறை ஆகியவை பாஜகவின் ஆட்களாகிவிட்டன என்று விமர்சித்துள்ளார். இது தவிர இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications