ரியல் எஸ்டேட் மசோதாவுக்கு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு- காலவரையின்றி ஒத்தி வைப்பு!
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ரியல் எஸ்டேட் மசோதா காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது.
ரியல் எஸ்டேட் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக ரியல் எஸ்டேட் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி திட்டமிட்டுள்ளது. ஆனால் இம்மசோதா கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமானது என்றும் வீடு வாங்கும் நடுத்தர மக்களுக்கு பாதகமானது என்றும் கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பு காரணமாக கடந்த 29-ந்தேதி இம்மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்வது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா பரிசீலனைக்கும், நிறைவேற்றுவதற்கும் பட்டியலிடப்பட்டு இருந்தது.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அக்ரவால் பிரச்சினை எழுப்பினார். அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே ரியல் எஸ்டேட் மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி அளித்திருப்பதால் மசோதாவை இப்போது கொண்டுவரக்கூடாது என்று அவர் கூறினார்.
அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத்தும் குரல் கொடுத்தார். மேலும் மசோதாவை சபையின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் அதே கோரிக்கையை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை முடிவடையும்வரை மசோதாவை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். இப்போது ஆலோசனையை தொடங்கி விட்டேன். இடையில் விடுமுறைகள் வந்ததால் ஆலோசனை முடிவடையவில்லை. அது முடிவடையும்வரை மசோதாவை எடுத்துக் கொள்ள மாட்டேன். தேர்வுக்குழுவுக்கு அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும் இந்த கூட்டத்தொடர் முடிவதற்குள் இம்மசோதாவை சபை பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் மசோதா இப்போதைக்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications