எதிர்ப்பு எதிரொலி: சொந்த செலவில் பிரேசில் செல்லும் கோவா எம்.எல்.ஏக்கள்
பனாஜி: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கண்டு ரசிப்பதற்காக கோவா எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சொந்த செலவில் பிரேசில் நாட்டிற்கு செல்கின்றனர். அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
6 எம்.எல்.ஏ.க்கள் ஆய்வுப் பயணம் மேற்கொள்வதற்கு கோவா அரசு 90 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இதனை வன்மையாகக் கண்டித்த எதிர்க்கட்சியான காங்கிரஸ், மக்கள் பணத்தை முதல்வர் மனோகர் பாரிக்கர் தவறாக பயன்படுத்துவதாக கூறியதுடன், அந்த பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

அரசு பணத்தில் ஜாலி
அரசுப் பணத்தில் பயணம் மேற்கொள்வது மாநில கருவூலத்தை திருடுவது போன்றது என்று மாநில காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு
அதேபோல ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, மக்கள் பணம் இவ்வாறு வீணாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அப்படி கால்பந்து பார்த்து ஆகவேண்டும் என்று விரும்பினால் எம்.எல்.ஏக்கள் தங்களின் சொந்த செலவில் பிரேசில் செல்லட்டும் அவர்களிடம் தேவையான அளவிற்கு பணம் இருக்கிறது என்றும் கூறினார்.
சிபிஐ குற்றச்சாட்டு
இதேபோல சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் அதுல் குமார் அஞ்சன், நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் கோவா எம்.எல்.ஏக்கள் அரசு பணத்தில் பிரேசில் செல்வது ஏற்புடையது அல்ல என்றார். இது எவ்வாறு கோவா டூரிஸத்தை வளப்படுத்த உதவும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கோவாவின் விளையாட்டு
இந்த பயணத்தை நியாயப்படுத்திய முதல்வர் மனோகர் பாரிக்கர், மாநில நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாகவும், கோவாவின் விளையாட்டு கால்பந்து என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும் இந்த பயணம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் சொந்த செலவில் பயணம் செய்ய உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். மக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற பயணங்களுக்கு எடுத்து செலவிடக்கூடாது என்பது தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications