வாய்க்கு வந்ததை பேசாம கோர்ட்டுக்கு வாங்க.. 2ஜி விவகாரத்தில் பி.சி.சாக்கோவுக்கு ஆ.ராசா சவால்!!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்பாக தம்மை விமர்சித்த மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கு வெளியே விமர்சிக்காமல் தம் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வந்து சாக்கோ தெரிவிக்க வேண்டும் என்றும் ராசா சவால்விடுத்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுவழக்கில் டெல்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் இறுதி வாதங்கள் தொடங்கியுள்ளன. இதில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் அனந்த் குரோவர் வாதிட்டபோது, அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசா தவறாக வழி நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ அளித்த பேட்டியில், தவறு செய்தது மன்மோகன் சிங் அல்ல- ராசா தான் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து ஆ.ராசா நேற்று வெளியிட்ட அறிக்கை:
சி.பி.ஐ. தனிநீதிமன்றத்தில் ஏப்ரல் 15-ந் தேதி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதி வாதங்கள் தொடங்கின. சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிகையில் பட்டியலிட்ட குற்றச்சாட்டுக்களை கூறினார். அதன் பிறகு வழக்கு 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பி.சி.சாக்கோ விமர்சனம் செய்துள்ளது ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
நீதிமன்றத்தில் இறுதி வாதத்தின்போது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அரசு வழக்கறிஞர் பட்டியலிடுவதும் அது குறித்த செய்திகள் வெளியாவதும் வழக்கமான ஒன்று. 2ஜி ஸ்பெக்ட்ரம் கூட்டுக்குழுவின் தலைவரான பி.சி.சாக்கோ, அறிக்கை தாக்கல் செய்துவிட்டு, நீதிமன்ற வாதம் குறித்து வேறு வகையாக விமர்சித்தது அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே நான் தனிப்பட்ட முறையில் பல தடவை கோரிக்கை விடுத்தும், கூட்டுக்குழு முன்பு என்னுடைய தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதி மறுத்தவர்தான் பி.சி.சாக்கோ. நான் தாக்கல் செய்த விரிவான பதிலை கூட்டுக்குழு அறிக்கையில் சேர்ப்பதற்கு தைரியமில்லாத பி.சி.சாக்கோ, என்னிடமும் கூட்டுக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடமும் அளித்த வாக்குறுதியை மீறி, எனது விரிவான பதிலை கூட்டுக்குழு அறிக்கையில் சேர்க்கவில்லை.
நான் 6.11.2013 அன்று அவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் பி.சி.சாக்கோவின் செயலை வடிகட்டிய கோழைத்தனம் என்று விவரித்து இருந்தேன். கூட்டுக்குழுவில் என்னுடைய தரப்பு கருத்தை அழைத்து கேட்பதற்கு தைரியமற்ற அவருக்கு, நீதிமன்ற வாதம் குறித்து விமர்சனம் செய்ய எவ்வித தகுதியும் கிடையாது.
பல்வேறு குறிக்கோளுடன் செயல்படும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த அடிப்படை அறிவு இருக்கும் என்று கருதக்கூடிய பி.சி.சாக்கோவிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கையை எதிர்பார்க்கவில்லை. வெளியில் இருந்து இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை விடுத்து, அவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார் என்றால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்.
இவ்வாறு ஆ.ராசா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications