ஆடைக் கட்டுப்பாடு தளர்வு.. பத்பநாபசுவாமி கோயிலுக்கு வரும் பெண்கள் சுடிதார் அணிய அனுமதி !
பத்பநாபசுவாமி கோயிலுக்கு வரும் பெண்கள், சுடிதார், சல்வார் கமீஸ் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பழைமையான பத்மநாப சுவாமி கோயிலில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆடைக் கட்டுப்பாட்டில் தளர்வு செய்யப்பட்டுள்ளது என அக் கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க, பெண்கள் இறுக்கமான ஆடைகளையும், சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளையும் அணிந்து கொண்டு கோயிலுக்கு வருவதற்கு நிர்வாகம் கட்டுப்பாட்டு விதித்திருந்தது.
இந்தநிலையில் பெண்கள் கோயிலுக்குள் சுடிதார் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று பெண் பக்தர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட் பல்வேறு தரப்பினரும் கோயில் இணை ஆணையருக்கு பல்வேறு கடிதங்களை அனுப்பியிருந்தனர்.
இந்த கோரிக்கைகளை தொடர்ந்து பெண்கள் கோயிலுக்குள் தளர்வான சுடிதார், சல்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரும் வகையில் ஆடைக்கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மாலை பெண்கள் சுடிதார், சில்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை அணிந்து அக்கோவிலுள் இறை வழிபாட்டில் ஈடுபட அனுமதி அளித்தனர்.