பஹல்காமில் தாக்குதல் தொடங்கியதும் அல்லாஹு அக்பர் என்று கத்திய ஜிப்லைன் ஆபரேட்டர்
டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் நடந்தபோது ஜிப் லைனில் சென்ற நபர் எடுத்த வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தாக்குதல் நடந்த போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் சொன்ன தகவல்கள் பதற வைப்பதாக இருக்கிறது.
கடந்த வாரம் காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் தொடர்பாகப் பல புதிய வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

ஜிப் லைன் இளைஞர்
அப்படி தான் சரியாக துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தபோது ஜிப் லைன் சென்ற ரிஷி பட் என்பவர் எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அவர் சிரித்துக் கொண்டே ஜிப் லைனில் பயணிக்கிறார். அப்போதே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அது என்னவென்று தெரியாததால் ரிஷி ஜிப் லைனில் ஜாலியாக செல்கிறார்.
ஜிப்லைன் ஆப்ரேட்டர்
அவர் அதில் செல்லும்போதே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. இடையில் ஒரு இடத்தில் கீழே துப்பாக்கிச் சூட்டிற்கு அஞ்சி ஓடிய நபர், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சரிவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை ரிஷி பட் என்ற நபர் இந்தியா டுடேவுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். ஜிப்லைன் ஆபரேட்டர் "அல்லாஹு அக்பர்" என்று கத்தியதாகவும் அப்போது அங்கே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் காஷ்மீர் மற்றும் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். நான் ஜிப் லைனில் பயணிக்கும் முன்பு தான் எனது மனைவி, மகன், மேலும் 4 பேர் ஜிப் லைனில் சென்றனர். அப்போது எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் ஜிப் லைனில் ஏறியவுடனேயே அந்த ஆப்ரேட்டர் 'அல்லாஹு அக்பர்' என்று மூன்று முறை கூறினார். அதன் பிறகே துப்பாக்கிச் சூடு தொடங்கியது.
குடும்பத்துடன் தப்பிவிட்டோம்
சுமார் 15-20 வினாடிகளுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு தொடங்கியது. எனது வீடியோவில் கூட ஒரு நபரைச் சுட்டுத் தள்ளுவதை நீங்கள் பார்க்கலாம். அப்போது தான் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தேன். உடனே என் ஜிப்லைன் கயிற்றை நிறுத்தி, சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே குதித்துவிட்டேன். அப்போது எனது உயிரைப் பற்றியும் எனது குடும்பத்தினர் உயிரைப் பற்றியும் மட்டுமே யோசித்தேன். இதனால் என் மனைவி மற்றும் மகனுடன் ஓட ஆரம்பித்தேன். நாங்கள் காட்டை நோக்கி ஓடினோம். பிறகு அங்கிருந்து பார்கிங் சென்று, பின்னர் பாதுகாப்புக்காக ஸ்ரீநகருக்குச் சென்றுவிட்டோம்.
என்று நடந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஜிப் லைனில் செல்லும் போது எனது மனைவி தயவுசெய்து கீழே இறங்கு எனக் கத்தினார்.. அப்போது நான் கீழே பார்த்தபோது தான் அந்தக் கொடூரத்தை உணர்ந்தேன். அதன் பிறகே நாங்கள் தப்பினோம்.
நூலிழையில் தப்பினேன்
நான் ஜிப் லைனில் இருந்த போது என் மனைவிக்கு அருகில், இன்னும் இரண்டு தம்பதிகள் இருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அங்கு வந்து, அவர்களின் பெயர்களைக் கேட்டுவிட்டுச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். நல்வாய்ப்பாக நான் ஜிப் லைனில் இருந்ததால் தப்பித்துவிட்டேன். எனது மனைவியுடன் இருந்திருந்தால் விபரீதமாக நடந்திருக்கும். தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளிடம் சென்றனர்.. கல்மா ஓத சொன்னார்கள். இது தெரியாதவர்களின் பெயர்களைக் கேட்டுச் சுட்டனர். 16- 18 பேரைச் சுட்டதை நானே எனது கண்ணால் பார்த்தேன்'
யாரும் உதவவில்லை
நாங்கள் காடுகளில் சென்று ஒளிந்து கொண்டோம். சுமார் 20 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் நாங்கள் அங்கேயே இருந்தோம். துப்பாக்கிச் சூடு நின்றவுடன் பார்கிங்கிற்கு ஓடிச் சென்றுவிட்டோம். பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைப் போல உடையணிந்திருந்தனர். நான் ஓடும்போது, இரண்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன்.. அவர்கள் எந்தவொரு ஆடையையும் அணியவில்லை. பயங்கரவாதிகள் அவர்களின் உடையைத் திருடியிருக்கலாம் என நினைக்கிறேன்.
துப்பாக்கிச் சூடு தொடங்கிய உடன் உள்ளூர்வாசிகள் முதலில் ஓடிவிட்டனர். உதவ யாருமே இல்லை. நாங்கள் காட்டில் இருந்தோம். ஆனால், 18 நிமிடங்களுக்குள், ராணுவம் வந்து எங்களைப் பாதுகாத்தது" என்றார்.
இதனிடையே சத்தம் கேட்ட அதிர்ச்சியில் ஜிப்லைன் ஆபரேட்டர் இறைவன் பெயரைச் சொல்லி அதிர்ச்சியில் கத்தியிருப்பாரே தவிர அவருக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications