"என்ன மதம் என கேட்டுவிட்டு சுட்டனர்.." உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி ஷிமான்ஷி கண்ணீர்
டெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிப் போடுவதாக இருக்கிறது. இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் உடலுக்கு நேற்று இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதற்கிடையே அவரது மனைவி ஷிமான்ஷி தீவிரவாத தாக்குதல் குறித்துப் பேசும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடந்து வருகிறது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துக்கத்தில் இருக்கிறார்கள்.

காஷ்மீர் தாக்குதல்
அப்படி இந்த மோசமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தியக் கடற்படை அதிகாரி வினய் நர்வால். இவருக்கும் ஹிமான்ஷிக்கும் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தான் திருமணம் நடந்திருந்தது. இவர்கள் தேனிலவுக்காகவே காஷ்மீர் சென்றிருந்தனர். அப்போது தான் தீவிரவாதிகள் விஜய்யை சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.
இந்தியக் கடற்படை அதிகாரி வினய் உடலுக்கு மூவர்ணக் கொடி போர்த்தப்பட்ட நிலையில், அவரது மனைவி ஹிமான்ஷி "ஜெய் ஹிந்த்" என முழங்கினார். ஹிமான்ஷி மேலும் கூறுகையில், "அவரது ஆன்மா சாந்தியடையட்டும்... நாம் அனைவரும் அவரைப் பற்றி எல்லா வகையிலும் பெருமைப்பட வேண்டும். அவரை எல்லா வகையிலும் பெருமைப்படுத்துவோம்" என்றார்.
இறுதி சடங்கு
நர்வாலின் உடல் புதன்கிழமை பிற்பகல் காஷ்மீரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஹரியானாவின் கர்னாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. உடல் தகனம் செய்யப்பட்டபோது கடற்படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர்.
ஷிமான்ஷி கண்ணீர்
இதற்கிடையே வினய் நர்வால் மரணம் தொடர்பாக அவரது மனைவி ஹிமான்ஷி அளித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, வினய் எந்த மதம் எனக் கேட்டுவிட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக ஹிமான்ஷி தெரிவித்தார். இது தொடர்பாக முன்பு ஹிமான்ஷி கூறுகையில், "நாங்கள் அப்போது பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். என் கணவரும் அருகில் இருந்தார். அப்போது திடீரென ஒரு நபர் வந்து எனது கணவரிடம் என்ன மதம் எனக் கேட்டார். எனது கணவர் பதில் சொன்ன அடுத்த நொடியே அவரை சுட்டுக் கொன்றான்" என்றார்.
வீர மரணம்
தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், மதத்தின் அடிப்படையிலும் சுட்டுக் கொன்றதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் குறிப்பிடுகிறார்கள். அதேநேரம் இந்தத் தாக்குதலில் இரு முஸ்லீம்களும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக அங்குக் குதிரை சவாரி செய்யும் தொழில் நடத்தி வரும் சையத் ஆதில் ஹுசைன் ஷா போராடி உயிரிழந்தார். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வந்தபோது அவர்களிடம் இருந்து சையத் ஆதில் ஹுசைன் ஷா துப்பாக்கியைப் பறித்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது தான் சையத் ஆதில் ஹுசைன் ஷாவையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடந்த இந்தத் தாக்குதல் நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமான அனைவர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications