இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு கோடிக் கணக்கில் ஹெராயின் கடத்தும் பாக்.
அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு கொண்டு செல்கையில் சிக்கியது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த 8 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். படகில் 232 பாக்கெட்டுகளில் இருந்த ரூ.600 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணயில் அந்த போதைப் பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்தது தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் பாகிஸ்தான் சுமார் 200 டன் ஹெராயினை கடத்தி உலக நாடுகளில் விற்பனை செய்கிறது. ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்படும் ஹெராயினில் 80 சதவீதம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த ஹெராயின் இந்தியா வழியாக ஐரோப்பிய சந்தைக்கு செல்கிறது.
கடந்த 2012ம் ஆண்டில் தான் இருப்பதிலேயே அதிகபட்சமாக 240 டன் ஹெராயின் பாகிஸ்தானில் இருந்து வெளியே சென்றுள்ளது. ஹெராயின் கடத்தல்காரர்களுக்கு ஆண்டுக்கு 80 பில்லியன் டாலர் லாபம் கிடைக்கிறது.
பாகிஸ்தான் தவிர வடக்கு ஆப்கானிஸ்தான் வழியாகவும் ஹெராயின் கடத்தப்படுகிறது. வடக்கு ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யாவுக்கு ஹெராயின் கடத்தப்படுகிறது. இந்த வழியாக ஆண்டுக்கு 100 முதல் 150 டன் ஹெராயின் கடத்திச் செல்லப்படுகிறது.
உலகில் 6 லட்சம் பேர் ஹெராயின் அடிமைகளாக உள்ளனர். இதில் இருப்பதிலேயே பாகிஸ்தானில் தான் ஹெராயின் அடிமைகளின் எண்ணிக்கை குறைவு. ஹெராயின் கடத்தல் மூலம் அதிகம் பணம் கிடைப்பதால் ஆப்கானிஸ்தானில் இந்த வியாபாரம் தொடர்பாக தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஹெராயின் கடத்த பாகிஸ்தானில் இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உதவி செய்கிறார். இந்திய கடல் வழி அவருக்கு நன்கு தெரியும் என்பதால் ஹெராயின் கடத்தல் எளிதில் நடக்க வழிவகை செய்கிறார்.












Click it and Unblock the Notifications