பாகிஸ்தானின் தாக்குதலால் எல்லையில் 250 பள்ளிக்கூடங்கள் தொடர்ந்தும் மூடல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் 250க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் கடந்த 16 நாட்களாக மூடப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்திய நிலைகளை மட்டுமின்றி எல்லையோர கிராமங்களையும் பாகிஸ்தான் குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது.
இதனால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சொந்த வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தும் உள்ளனர்.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பிஞ்சுக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களும் கூட தப்பவில்லை. இதனால் கடந்த 1-ந் தேதி முதல் எல்லையோரங்களில் உள்ள 250க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. பெரும்பாலான பள்ளிக் கூடங்கள் அகதிகளாக தஞ்சமடைவோருக்கான முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை நீடித்து வருகிறது.