நடுக்கடலில் பரபரப்பு.... குஜராத் அருகே சிக்கிய பாக். படகில் ரூ. 600 கோடி ஹெராயின்....!
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவிய படகிலிருந்து ரூ. 600 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தப் படகில் மொத்தம் 232 பாக்கெட்களில் ஹெராயின் போதைப் பொருள் இருந்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 600 கோடியாகும் என்று கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செயற்கைக் கோள் தொலைபேசி ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவையும் படகிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் படகில் மொத்தம் 8 பாகிஸ்தானியர்கள் இருந்துள்ள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு மேல் அதில் யாரும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய கடலோரக் காவல் படையின் செய்தித்தொடர்பாளர் ஐஜி சிங் ஒன்இந்தியாவிடம் கூறுகையில், விரைவில் இந்த படகு விவகாரம் குறித்த முழு விவரம் தெரிய வரும்.

குஜராத் கடல் பகுதியில் சிக்கிய இந்தப் படகு தற்போது போர்பந்தருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

இந்தப் படகைப் பிடிப்பதில் கடலோரக் காவல்படையும், கடற்படையும் இணைந்து செயல்பட்டன. இதில் கடலோரக் காவல்படையின் கப்பலான ஐசிஜி சங்க்ராம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. மேலும் கடற்படையின் நிர்காத், கோண்டுல் கப்பல்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இப்படித்தான் பாகிஸ்தானிலிருந்து ஒரு மர்மப் படகு இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து வந்தது. இதை கடலோரக் காவல் படையினர் மடக்கி் பிடித்தபோது அது வெடித்துச் சிதறியது. அதில் இருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர். அவர்கள் யார் தீவிரவாதிகளா, மீனவர்களா என்பது தெரியாமல் பெரும் மர்மமாக இருந்தது. இந்த நிலையில் இன்னொரு பாகிஸ்தான் படகால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications