டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது.. ராணுவ ரகசியங்களை உளவு பார்த்தது அம்பலம்!
டெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி, இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இரு நாட்டு உறவில் இது மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றும் மெகமூத் அக்தர் என்பவர் கைது செய்யப்பட்ட நபராகும். இவர் கடந்த இரு மாதங்களாகவே, இந்திய பாதுகாப்பு துறை தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்து வந்ததை உளவுத்துறை, டெல்லி, சாணக்யாபுரி காவல் நிலையத்தில் புகாராக அளித்தது.

இதையடுத்து, போலீசார் அதிரடியாக மெகமூத் அக்தரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து, இந்திய பாதுகாப்பு, ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் 'ஒன்இந்தியா'விடம் தெரிவித்தன.
ராணுவ உளவு தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பும் முன்பாகவே, மெகமூத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. இவருக்கு தகவல்களை சேகரிக்க, உள்நாட்டில் உடைந்தையாக இருந்தவர்கள் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் யூரியில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ராணுவ வீரர்கள் 19 பேர் வீர மரணமடைய காரணமாக இருந்ததால் இரு நாட்டு உறவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சர்ஜிகல் தாக்குதல் அந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான், பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications