கீதாவை அனுப்பிய பாகிஸ்தான், ரம்ஜானை அனுப்பி வைக்கும் இந்தியா
டெல்லி: கீதா நாடு திரும்பியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் சிறுவன் ரம்ஜானை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
8 வயதில் வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்ற கீதா 15 ஆண்டுகள் கழித்து திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்நிலையில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் முகமது ரம்ஜான்(15) மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2013ம் ஆண்டு சிக்கினார்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த அவர் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரம்ஜானின் தந்தை தனது மனைவியை விட்டு பிரிகையில் மகனை அழைத்துக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் குடியேறினார்.
வங்கதேசத்தில் அவர் மறுமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் ரம்ஜான் கடந்த 2013ம் ஆண்டு வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்டார். ரம்ஜானின் தாய் கராச்சி நகரில் வசித்து வருகிறார்.
அவர் தனது மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கீதா இந்தியா திரும்ப காரணமாக இருந்த பிரபல பாகிஸ்தான் சமூக ஆர்வலர் அன்சார் பர்னியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ரம்ஜான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று முன்பு மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் ரம்ஜானை அவரின் தாயுடன் சேர்த்து வைக்குமாறு பர்னி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரம்ஜானை அவரது தாயுடன் சேர்த்து வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications