இந்தியாவிலிருந்து பஞ்சு, காய்கறி இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை!
இந்தியாவில் இருந்து பஞ்சு, காய்கறி உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு தற்காலிக தடைவிதித்துள்ளது.
டெல்லி: இருநாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தற்காலிகமாக தடைவிதித்துள்ளது.
இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் படை வீரர்களின் அத்துமீறலால் இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் படையினர் பாதுகாப்பு முகாம்களில் பணியில் இருக்கும் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்துவதும் வீரர்களின் தலையை துண்டித்து உடலை சிதைப்பதும் இந்திய அரசியல் மட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வாகா எல்லை வழியாக மற்றும் கராச்சி துறைமுகத்துக்கு பருத்தி, காய்கறி உள்ளிட்ட இந்திய விவசாயப் பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசு தற்காலிகமாக தடைவிதித்துள்ளது. எந்த எழுத்துப்பூர்வமான முன்னறிவிப்பும் எச்சரிக்கையும் இன்றி பாகிஸ்தான் இந்தியாவுடனான இறக்குமதிக்கு தடைவிதித்திருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.