ஜம்முவில் மூன்றாவது நாளாக துப்பாக்கிச் சண்டை... பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா!
ஜம்மு : ஜம்முகாஷ்மீரின் எல்லைப் பகுதியில் மூன்றாவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
பூஞ்ச் பகுதியில் நேற்று காலையில் பாகிஸ்தான் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி வந்து தாக்குதலை நடத்தினர். கிருஷ்ணா கதி செக்டாரில் நடந்த இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனிடையே திங்கட்கிழமை காலையிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இந்திய ராணுவ கூடாரங்கள் மற்றும் எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள கிராமங்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 12 மணி நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தும் மூன்றாவது தாக்குதல் இது.
பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் கொடுத்து வருவதாக உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பூஞ்ச்சில் உள்ள கலகோடே செக்டாரிலுள்ள டெக்வார் மற்றும் குல்புர் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சண்டை காரணமாக டெக்வார் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.